முடிக்காக தூக்குபோட்டு உயிரை விட்ட கல்லூரி மாணவன்
பெங்களூர்: தலை முடி வளர்க்க எடுத்துக்கொண்ட சிகிச்சை பலனளிக்காததால் கல்லூரி மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழுக்கை தலையில் முடி முளைக்க வேண்டுமா, ஆப்பிரிகா, அமெரிக்கா காடுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட அருமருந்து எங்களிடமுள்ளது என்பது போன்ற வாசகங்களுடன் டிவி சேனல்களில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் இதை வாங்கிய பயனாளிகள் பலரும், தலையில் மிளகாய் அரைத்துவிட்டதாகவே புலம்புகிறார்கள். ஆனால் முடி போனால் என்ன என்று அவரவர் வேலையை பார்ப்பார்கள்.
ஆனால், பெங்களூரில் கல்லூரி மாணவன் ஒருவர் முடிக்காக உயிரையே விட்டுள்ளார். ஆந்திர மாநிலம் வாராங்கல்லை சேர்ந்த மகேந்திரா (23) பெங்களூர் சர்ஜாப்பூர் சாலையிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிடெக் இறுதியாண்டு படித்துவந்தார்.
எச்எஸ்ஆர் லேஅவுட்டிலுள்ளள மாணவர் தங்கும் விடுதியில் சகமாணவர்கள் சிலருடன் தங்கியபடி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு தலையில் அதிக அளவு முடி கொட்டி சிறிது முன்வழுக்கையாக இருந்துள்ளது. இதனால் தாழ்வுமனப்பான்மையில் புழுங்கிய மகேந்திரா, தலைமுடியை வளர்க்க சிகிச்சை எடுத்துவந்துள்ளார்.
ஆனால் வழுக்கை தலையில் முடி முளைப்பதாக இல்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மகேந்திரா நண்பர்கள் வெளியே சென்ற நேரத்தில் ஹாஸ்டல் அறையிலுள்ள மின் விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்துவிட்டார். நள்ளிரவு சுமார் 1 மணிக்கு வெளியே சென்ற நண்பர்கள் திரும்பி வந்தபோது இதுபற்றி தெரிந்துள்ளது. அவர் தற்கொலை கடிதம் எழுதி வைக்கவில்லை என்றபோதிலும் போலீசாரின் விசாரணையில் மகேந்திராவின் தற்கொலைக்கான காரணத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.