கொழும்பு சர்வதேச ராணுவ கருத்தரங்கில் சு.சுவாமி பங்கேற்பு
டெல்லி: இலங்கையில் நடைபெற உள்ள 4வது சர்வதேச ராணுவ கருத்தரங்கத்தில் நடப்பாண்டிலும் தாம் பங்கேற்க இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 2009ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு முதல் சர்வதேச ராணுவக் கருத்தரங்கை அந்நாட்டு அரசு ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.
இதில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் சர்வதேச நாடுகளின் ராணுவம், காவல் துறைகள் கையாளும் உத்திகள் உள்ளிட்டவை பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. பல்வேறு நாட்டு ராணுவ அதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.
இக்கருத்தரங்கில் ஆண்டுதோறும் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர்.
தற்போது 4வது ஆண்டாக ஆகஸ்ட் 18ந் தேதி முதல் 20ந் தேதி வரை கொழும்பில் சர்வதேச ராணுவ கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை அந்நாட்டு ராணுவம் செய்துள்ளது. இந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக 67 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, கொழும்பு சர்வதேச ராணுவ கருத்தரங்கில் தாம் கலந்து கொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.