ஓட்டு வேட்டை.. மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் ஆண்டுக்கு 12ஆக உயர்வு: வீரப்ப மொய்லி உறுதி
டெல்லி: மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் எண்ணிக்கை 9இல் இருந்து 12ஆக உயர்த்தப்படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் எம். வீரப்ப மொய்லி உறுதியளித்தார்.
மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே முடியாது என்று கடந்த சில மாதங்களாக பிடிவாதமாக கூறிவந்த வீரப்ப மொய்லி, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விடுத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக தனது முடிவை மாற்றிக் கொண்டார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, ஆண்டுக்கு 9 மானிய எரிவாயு சிலிண்டர்கள் மட்டும் வழங்குவது மக்களுக்கு போதுமானதாக இல்லை. அதை 12ஆக உயர்த்த வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக் கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, மானிய சமையல் எரிவாயு சிலிண்டரின் எண்ணிக்கை 9இல் இருந்து 12ஆக உயர்த்தப்படும். இதை மத்திய அமைச்சரவை முன்வைத்து விரைவில் ஒப்புதல் பெறப்படும் என்று கூறினார்.
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விவகாரம் குறித்து கடந்த வாரம் பேசிய வீரப்ப மொய்லி, நாட்டில் உள்ள 15 கோடி சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களில் 89. 2 சதவீதத்தினர் ஆண்டுக்கு அதிகபட்சமாக 9 சிலிண்டர்களையே பயன்படுத்துகின்றனர். வெறும் 10 சதவீதத்தினர் மட்டுமே கூடுதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாங்குகிறார்கள் என்பதால் எண்ணிக்கையை 12ஆக உயர்த்த தேவையில்லை' என்று கூறியிருந்தார்.
2012ஆம் ஆண்டு 6ஆக குறைக்கப்பட்ட மானிய சிலிண்டர் எண்ணிக்கை 2013-ல் 9ஆக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே மத்திய அரசு லோக்சபா தேர்தலில் வாக்காளர்களை கவருவதற்காக உணவு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பலவற்றை அறிவித்திருக்கும் வரிசையில் தற்போது மானிய விலை உயர்வு சிலிண்டரும் இணைந்திருக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.