சுதாகரன், இளவரசி சொத்துமதிப்பு அதிகரித்து காட்டப்பட்டுள்ளது!
பெங்களூரு: சுதாகரன், இளவரசியின் சொத்து மதிப்பை விட கூடுதலாக 26 கோடி ரூபாய் உயர்த்திக் காட்டப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தற்போது இறுதி வாதம் தொடங்கி உள்ளது. அரசு தரப்பு, ஜெயலலிதா, சசிகலா தரப்பு வக்கீல்களின் வாதம் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது.
இறுதி வாதம்
இந்த நிலையில் சுதாகரன், இளவரசி தரப்பினரின் இறுதி வாதம் மூன்றாவது நாளாக இன்று நடைபெற்றது.
திருமணச் செலவு
சுதாகரன், இளவரசி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹமீது தேசாய், சுதாகரனின் திருமணச் செலவினங்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அதனை நீதிமன்றம் ஏற்கக்கூடாது என்றும் எடுத்துரைத்தார்.
பெண் வீட்டார் செலவு
தமிழ் கலாச்சாரப்படி பெண் வீட்டாரே திருமணச் செலவுகளை செய்வதாகவும், சுதாகரனின் திருமணச் செலவுகளையும் பெண் வீட்டாரே செய்ததாகவும் குறிப்பிட்டார்.
சொத்து மதிப்பு
அதேபோல், இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சொத்துக்களின் மதிப்பு பன் மடங்கு உயர்த்தி காட்டப்பட்டுள்ளதாகவும், அதனையும் நீதிமன்றம் ஏற்றக்கூடாது என வழக்கறிஞர் ஹமீது தேசாய் தெரிவித்தார்.
ரூ.26 கோடி அதிகம்
சுதாகரன், இளவரசியின் சொத்து மதிப்பை விட கூடுதலாக 26 கோடி ரூபாய் உயர்த்திக் காட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
புதிய மனு தாக்கல்
இதனிடையே, முதல்வர் ஜெயலலிதா சொத்து சேர்ப்பதற்கு சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஊன்றுகோலாய் இருந்ததாக கூறப்பட்டுள்ளதை எதிர்த்து, நால்வர் தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இறுதித் தீர்ப்புக்கு முன்னதாக இந்த மனு மீதான முடிவை அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.