முதல்வர் வேட்பாளராக அறிவிக்க மறுப்பு- மகாராஷ்டிரா அமைச்சர் நாரயண் ரானே ராஜினாமா!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தம்மை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் மேலிடம் மறுத்ததால் தொழில்துறை அமைச்சர் நாரயண் ரானே தமது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
மகாராஷ்டிராவின் கொங்கண் பிரதேசத்தில் சிவசேனாவின் மூத்த தலைவராக திகழ்ந்தவர் நாராயண் ரானே. 1999ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த போது 9 மாதம் முதல்வராக இருந்தார்.
பின்னர் 2005ஆம் ஆண்டு அவர் சிவசேனாவை விட்டு வெளியேறி காங்கிரஸில் சேர்ந்தார். காங்கிரஸில் சேர்ந்த நாள் தொடக்கம், முதல்வர் கனவில்தான் இருந்து வருகிறார் நாரயண் ரானே.
2008-ல் முதல்வர் பதவி
2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் நடைபெற்ற போது அப்போது மாநில முதல்வராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக் ராஜினாமா செய்தார். அப்போது தமக்குத்தான் முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் நாராயண் ரானே.
அசோக் சவானுக்கு போனது
ஆனால் சிவசேனாவில் இருந்து வந்த ஒருவருக்கு பதவி தராமல் காங்கிரஸ் கட்சிக்காக பாடுபட்டு வரும் அசோக் சவானுக்கே முதல்வர் பதவி தர வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்திடம் போராடினார் விலாஸ்ராவ் தேஷ்முக். இதனால் அசோக் சவான் முதல்வரானார்.
மீண்டும் கைவிட்டு போனது
2009ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போது தமக்கே முதல்வர் பதவி என்று நம்பிக்கையோடு காத்திருந்தார் நாராயண் ரானே. ஆனால் கொங்கண் பகுதியில் அவரது ஆதரவாளர்கள் பலரும் தோல்வி அடைந்தனர். அப்போதும் நாராயண் ரானேவுக்கு முதல்வர் பதவி கிடைக்காமல் போனது.
இப்பவும் கிடைக்கலை
அதன் பின்னர் ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் விவகாரத்தில் அசோக் சவான் ராஜினாமா செய்து பிருத்விராஜ் சவான் முதல்வரான போதும் ஏமாற்றமடைந்தார் நாரயண் ரானே. இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி படு தோல்வி அடைந்தது. நாராயண் ரானேவின் மகனும் சிவசேனாவிடம் தோற்றுப் போனார்.
ராஜினாமா நிராகரிப்பு
தேர்தல் முடிவுகள் வெளிவந்த நாளிலேயே நாராயண் ரானே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அதை முதல்வர் பிருத்விராஜ் சவான் ஏற்கவில்லை.
பிருத்வியை மாற்றவில்லை
மேலும் இப்படுதோல்வி காரணமாக பிருத்விராஜ் சவானை காங்கிரஸ் மேலிடம் மாற்றும்.. தமக்கே முதல்வர் பதவி கிடைக்கும் என்றும் காத்திருந்து பார்த்தார்.
முதல்வர் வேட்பாளர்
அப்படி இல்லையெனில் வரும் சட்டசபை தேர்தலில் தம்மை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க வேண்டும் என்று போராடிப் பார்த்தார்.
மீண்டும் ராஜினாமா
இது எதுவுமே நடக்காத நிலையில் வெறுப்படைந்த நாராயண் ரானே தாம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இதன்படி இன்று முதல்வர் பிருதிவிராஜ் சவானை சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். ஆனால் அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதா? இல்லையா? என்பது அறிவிக்கப்படவில்லை.
பாஜகவில்?
இதனிடையே நாராயண் ரானே பாரதிய ஜனதாவில் இணைய இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜகவின் மகாராஷ்டிரா மாநில முகமாக இருந்த கோபிநாத் முண்டே மறைவைத் தொடர்ந்து அவரைப் போல பிரபலமான ஒருவரை பாஜக தேடிக் கொண்டிருக்கிறது. நாராயண் ரானேவுக்கு கொங்கண் பகுதியில் செல்வாக்கு இருப்பதால் அவருடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது.
என்ன நடக்கும்?
இந்த நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை நாராயண் ரானே மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதனால் நாராயண் பாஜகவுக்கு செல்வாரா? அப்படி பாஜகவில் நாராயண் ரானே இணைந்தால் சிவசேனா என்ன மாதிரியான நிலைப்பாடு மேற்கொள்ளும்? என்பது போன்ற பரபரப்பான கேள்விகளுக்கான விடைகளுக்கு காத்திருக்கிறது மகாராஷ்டிரா அரசியல் களம்.,