ஐ.பி.எல். பிக்ஸிங் விசாரணை- பிசிசிஐ பரிந்துரை நிராகரிப்பு! முத்கல் கமிட்டி விசாரிக்கிறது!!
டெல்லி: ஐ.பி.எல். முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்த மூவர் குழுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டபடி நீதிபதி முத்கல் கமிட்டி தொடர்ந்து விசாரணைகளை நடத்தவும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது ஐ.பி.எல். பிக்ஸிங் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது சிபிஐ விசாரணை நடத்துவதற்கு பதில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமே ஒரு குழுவை பரிந்துரைத்து அது விசாரணை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
இதைத் தொடர்ந்து ஷிவ்லால் யாதவ் தலைமையில் நேற்று முன்தினம் நடந்த கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை உச்சநீதிமன்றத்தில் பரிந்துரை செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த குழுவில் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ரவிசாஸ்திரி, கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.என்.பட்டேல், சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ஆர்.கே.ராகவன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
ஆனால் விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேருக்குமே எதிர்ப்பு கிளம்பியது. கிரிக்கெட் வாரியத்தால் ஊதியம் பெறும் ரவிசாஸ்திரி விசாரணை குழுவில் இடம் பெறக்கூடாது என்று பீகார் கிரிக்கெட் சங்க தலைவர் ஆதித்யா வர்மா முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சரத்பவார், ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித்மோடி ஆகியோரும் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
கிரிக்கெட் வாரியத்தால் பரிந்துரை செய்யப்பட்ட 3 பேருக்கும் கிரிக்கெட் வாரியத்தில் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருப்பதால் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் பிக்ஸிங் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது கிரிக்கெட் வாரியத்தால் பரிந்துரை செய்த குழுவை உச்சநீதிமன்றமும் நிராகரித்தது.
என்.சீனிவாசன், சீனியர் கிரிக்கெட் வீரர்கள் உள்பட குற்றம் சாட்டப்பட்ட 13 பேர் மீது முத்கல் கமிட்டி விசாரணை நடத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டு அவர்களது கருத்தை கேட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து நீதிபதி முத்கல் கமிட்டியும் உச்சநீதிமன்றத்தின் கருத்தை ஏற்று விசாரணை நடத்த ஒப்புதல் தெரிவித்துள்ளது.