இந்தியாவை சுத்தப்படுத்த துடைப்பத்தை எடுத்துக் கொண்டு சுற்றிய 'நம்மவர்' அமைச்சர்கள்!
டெல்லி: கிளீன் இந்தியா என்ற இந்தியாவை சுத்தப்படுத்தும் கோஷத்தை மத்திய அரசு முன்வைத்து காந்தி ஜெயந்தியான இன்று அதை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
இதையடுத்து பிரதமர் மோடி துடைப்பத்தை எடுத்துக் கொண்டு சுத்தப்படுத்த ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார், அமைச்சர்கள் சும்மா இருப்பார்களா, அவர்களும் கையில் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு நம்மவர் படம் கமல்ஹாசன் போல "சுத்தம் என்பது நமக்கு.." என்று பாடியபடியே, குப்பைகளை அகற்ற ஆரம்பித்துவிட்டனர்.
ஸ்மிருதி இரானி
டெல்லியிலுள்ள பள்ளியொன்றில், குப்பையை கூட்டுகிறார் மனித வள அமைச்சர் ஸ்மிருதி இரானி. கல்வி தொடர்பான அமைச்சர் என்பதாலோ என்னவோ, சுத்தம் செய்ய பள்ளியை தேர்ந்தெடுத்துள்ளார்.
ரவிசங்கர் பிரசாத்
சாஸ்திரி பவன் அருகே சுத்தம் செய்கிறார், மத்திய சட்டம், தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
உமா பாரதி
டெல்லி சிரம்சக்தி பவனுக்கு வெளியே வரிந்து கட்டிக் கொண்டு குப்பையை வாரி கொட்டுபவர் நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி. கங்கையையே சுத்தம் செய்ய புறப்பட்டிருக்கும், உமா பாரதிக்கு, தெருவை சுத்தம் செய்வது பெரிய விஷயமா என்ன.
ராம் விலாஸ் பாஸ்வான்
மத்திய உணவு வழங்கல் அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், டெல்லியில் இந்திய உணவு கழக அலுவலகத்துக்கு வெளியே குப்பையை கூட்டுகிறார்.
ஜிதேந்திர சிங்
பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், நாடாளுமன்றத்துக்கு வெளியே குவிந்துள்ள குப்பைகளை அகற்றுகிறார்.
நம்மவர்
இறுதியில், பிரதமரை சொல்லாமல் விட்டால் எப்படி. அவர்தானே இன்றைக்கு நம்மவர் கமல். டெல்லியில், மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுடன் இணைந்து பிரதமர் என்பதையும் மறந்து நாட்டை சுத்தப்படுத்த துடைப்பத்துடன் கிளம்பிய பிரதமர் நரேந்திர மோடி.