இந்தியாவுக்கு எதிரான போராட்டம்- தலிபான்-அல்கொய்தாவிடம் ஆதரவு கோருகிறார் சலாஹூதீன்!
டெல்லி: இந்தியாவுக்கு எதிராக போரிடும் தங்களுக்கு தலிபான்-அல் கொய்தா உதவி செய்ய வேண்டும் என்று ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் என்ற தீவிரவாத இயக்கத்தின் தலைவர் சையத் சலாஹூதீன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஈராக் நாட்டில் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்களின் ஆயுத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். போரிட்டு வருகிறது. ஏற்கெனவே இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக புனிதப்போர் தொடுப்போம் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தளபதி இப்ராஹிம் அவாத் அல் பாத்ரி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக போராட தலிபான்-அல் கொய்தா தீவிரவாத அமைப்புகள் உதவி செய்ய வேண்டும் என்று ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் அமைப்பின் தலைவர் சையத் சலாஹூதீன் அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுக்கூட்டம் ஒன்றில் சலாஹூதீன் பேசியதாவது:
அல்கொய்தா- தலிபான் மற்றும் இதே கொள்கையில் உள்ள அமைப்புகள் மற்றும் நாடுகள், இந்திய அரசுக்கு எதிரான விடுதலை இயக்கத்திற்கு உதவி செய்ய வேண்டும்.
ஒடுக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு அளித்தால் அதனை நாங்கள் வரவேற்போம். காஷ்மீரில் இந்திய ராணுவம் பயங்கரவாத ஆட்சி நடத்துகிறது. இதனால் மக்கள் கொல்லப்படுகின்றனர்.
இவ்வாறு சலாஹூதீன் பேசினார்.
ஹர்கத்-உல்-அன்சார், ஹிஸ்ப்-உல்-முஜாகிதீன், ஜாமியத்-உல்-முஜாகிதீன், அல்-ஜிகாத், அல்-பர்க், அல்- பதர், மற்றும் தெரிக்-உல்-முஜாகிதீன் ஆகிய தீவிரவாத இயக்கங்களின் கூட்டமைப்புதான் ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அழைப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.