பழமையான இந்து கோயிலின் ஒரு பகுதியே தாஜ்மஹால்: பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை!
லக்னோ: பழமையான இந்து கோயிலின் ஒரு பகுதியே தாஜ்மஹால் என உத்திரப்பிரதேச மாநில பாஜக தலைவர் லட்சுமி காந்த் பாஜ்பாய் பேசியிருப்பது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
கடந்த 13ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆஸம்கான், ‘தாஜ்மகாலை உத்தரப் பிரதேச மாநில வக்ஃபு வாரியத்தின் சொத்தாக அறிவிக்க வேண்டும் என்றும், தாஜ்மகாலின் நிர்வாகியாக தன்னை நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் உத்திரப்பிரதேச மாநில பாஜக தலைவர் பாஜ்பாய், பஹ்ராய்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தாஜ்மஹால் இருக்கும் இடத்தில், தேஜோ மகாலய கோயில் இருந்தது. அந்த கோயில் நிலத்தை ராஜா ஜெய் சிங்கிடம் இருந்து முகலாயப் பேரரசர் ஷாஜஹான் விலைக்கு வாங்கினார். இதற்கான ஆவணங்கள் உள்ளன.
சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் ஆஸம்கான், வக்ஃபு வாரிய சொத்துகளை முதலில் அபகரித்தார். தற்போது, தாஜ்மஹாலை அவர் குறிவைத்துள்ளார். தாஜ்மஹாலில் 5 முறை தொழுகை நடத்த வேண்டும் என்ற அவரது கனவு ஒருபோதும் நிறைவேறாது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து, அனைத்து இந்திய ஷியா அமைப்பின் சட்ட அமைப்பு தெரிவிக்கையில், "தாஜ்மஹால், நாட்டின் சொத்தாகும். அதை சன்னி அமைப்பிடமோ அல்லது ஷியா அமைப்பிடமோ அளிக்கக் கூடாது. ஏற்கெனவே தங்களிடம் இருக்கும் மசூதிகளை சன்னி, ஷியா பிரிவினரால் பராமரிக்க இயலாதபோது, தாஜ்மஹாலை எப்படி கவனிப்பார்கள்' என்று தெரிவித்துள்ளது.
தாஜ்மஹால் இந்து கோயிலின் ஒரு பகுதி என்று பாஜக தலைவர் கூறியிருப்பதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.