என்னை இனி நீங்கள் பார்க்கப் போவதே இல்லை- தெலுங்கானா விவசாயியின் கடைசி அழைப்பு!
மேடக்: தெலுங்கானா மாநிலம் மேடக்கில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 6 ஆம் தேதி அன்று இரவு மேடக் கிராம தலைவருக்கு பேரையா என்ற விவசாயியிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், "தயவு செய்து என்னுடைய குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள் - என்னை இனிமேல் நீங்கள் பார்க்கவே முடியாது" என்று வேகமாக கூறிவிட்டு வைத்துவிட்டார்.
பதறிப்போன தலைவர் பேரையாவின் நிலத்திற்குச் சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார் அவர்.
பேரையா மட்டுமல்ல இதுபோன்று 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 2 மாதங்களில் தெலுங்கானாவில் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். பருவமழை பொய்த்துப் போனதால், விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக மழை கொட்டினாலும், பயிரிடுவதற்கான காலம் கடந்ததாலும், கையிருப்புகளும் கரைந்து போனதாலும் விவசாயிகள் இன்னும் கண்ணீர் விட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
" இந்நிலை மாறுவதற்கு வழியே இல்லை" என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் லக்ஷ்மண் சிங் ரத்தோர் கூறியுள்ளார்.
" எனக்கு பின்னால் என் மகன் குடும்பத்தைக் காப்பாற்றுவான் என நினைத்தேன். ஆனால், அவனுடைய குழந்தைகளுக்காகவாவது நான் நீண்ட நாட்கள் வாழ்ந்து ஆக வேண்டும்" என்று பேரையாவின் தந்தை கூறியுள்ளார்.
இறந்துபோன பேரையாவிற்கு மனைவியும், 7 மற்றும் 5 வயதான இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இதே நிலை தொடராமல் இருக்க விரைவில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இல்லை எனில் இன்னும் பல பேரையாக்களின் இழப்பு, விவசாயத்தையே அழிந்து போகும் நிலைக்கு தள்ளிவிடும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.