தேஜ்பால் சிறை அறையில் 'செல்'...அனைத்து சலுகைகளும் ரத்து!
உடன் பணி புரிந்த பெண் பத்திரிக்கையாளரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கோவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தெகல்கா பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பால்.
தற்போது பனாஜி அருகே வாஸ்கோ நகரில் சடா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேஜ்பால் மீதான ஜாமீன் மனு வரும் மார்ச் 4-ம் தேதி மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா கிளையில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே கடந்த திங்களன்று சிறை அதிகாரிகள் சிறை வளாகத்தில். நடத்திய அதிரடி சோதனையில் தேஜ்பால் அடைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து ஒரு செல்போன் உட்பட மொத்தம் 9 செல்போன்கள், எம்.பி3 மற்றும் ஹெட்போன்கள் முதலியன கைப்பற்றப்பட்டன. தனது அறையிலிருந்து கைப்பற்றப் பட்ட செல்போன் தான் பயன் படுத்தியதில்லை என தேஜ்பால் மறுத்திருந்தார்.
ஆனபோதும்,தேஜ்பாலுக்கு சிறைக்குள் பல வசதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து உதவி கலெக்டர் கௌரிஷ் ஷங்வால்கர் கூறுகையில், ‘திங்கள் கிழமை செல்போன்கள் பறிமுதல் செய்ததை தொடர்ந்து தருண் தேஜ்பால் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் வசதி குறைக்கப்பட்டுள்ளது. தேஜ்பாலின் வழக்கறிஞர் விரும்பும் போது அவரை சந்திக்க முடியும்' எனத் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் மற்ற கைதிகள் தங்களின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது. கைதிகள் யாரை சந்திக்க விரும்புகிறார்கள் என்று ஒரு பட்டியல் வழங்கியுள்ளனர். அவர்கள் மட்டும் வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பிற்பகல் 3 மணியில் இருந்து 5.30 மணிக்குள் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.