தஸ்லிமா நஸ்ரினுக்கு மீண்டும் ஓராண்டு விசா: 2015 ஆகஸ்ட் வரை இந்தியாவில் தங்க அனுமதி
டெல்லி: வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை இந்தியாவில் தங்கிக் கொள்வதற்கான ஓராண்டு விசாவை மத்திய அரசு வழங்கியுள்ளது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஏறத்தாழ 20 ஆண்டுகளாக அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா ஆகிய நாடுகளில் மாறி, மாறி வசித்து வருகிறார் வங்க தேச பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் . தற்போது இவர் ஸ்வீடன் நாட்டு குடியுரிமையுடன் கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் திடீரென மத்திய அரசு தஸ்லிமாவின் ஓராண்டு விசாவை ரத்து செய்து 2 மாத கால தற்காலிக சுற்றுலா விசாவை வழங்கியது. மத்திய அரசின் இந்த முடிவால் தஸ்லிமா அதிர்ச்சியடைந்தார்.
அதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார் தஸ்லிமா. அபோது மீண்டும் தஸ்லிமாவுக்கு ஓராண்டு விசா வழங்க நடவடிக்கை எடுப்பதாக ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.
அதன்படி, நேற்று தஸ்லிமாவிற்கு அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை இந்தியாவில் தங்கிக் கொள்வதற்கான ஓராண்டு விசாவை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வங்கதேச எழுத்தாளர்...
தனது எழுத்துக்கள் மூலம் இஸ்லாமிய அடிப்படைவாதங்களை எதிர்த்ததாலும், அங்கு வாழும் சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுத்ததாலும், கடந்த 1994ம் ஆண்டு வங்கதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் பிரபல பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின்.
இந்தியா வருகை...
வங்கதேசத்திலிருந்து வெளியேறி இந்தியா வந்த தஸ்லிமா, கொல்கத்தா நகரிலும், அதனைத் தொடர்ந்து டெல்லியிலும் சிலகாலம் வசித்து வந்தார். பின்னர் அங்கிருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றார்.
ஸ்வீடன் குடியுரிமை...
தஸ்லிமாவுக்கு ஸ்வீடன் நாடு குடியுரிமை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் கடந்த 2004ம் ஆண்டு இந்தியா வந்தார். அன்று முதல் இந்தியாவில் தங்குவதற்கு ஏதுவாக ஆண்டுதோறும் தஸ்லிமாவுக்கு ஓராண்டு விசா வழங்கி வந்தது இந்தியா.
நிராகரிப்பு...
இந்நிலையில் தற்போது டெல்லியில் வசித்து வரும் தஸ்லிமா, இந்த அனுமதியை மேலும் ஓராண்டுக்கு புதுப்பிக்க சமீபத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. ஓராண்டிற்கு பதிலாக 2 மாத கால தற்கால சுற்றுலா விசாவை மட்டும் வழங்க சம்மதித்தது.
ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு...
இதனைக் கேட்டு அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்த தஸ்லிமா, இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது மீண்டும் தனக்கு ஓராண்டு விசா வழங்க மத்திய அரசு சம்மதித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
ஓராண்டு விசா....
இந்நிலையில், தற்போது மீண்டும் தஸ்லிமாவுக்கு ஓராண்டு விசா வழங்க சம்மதித்துள்ளது மத்திய அரசு. இதன்படி அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை அவர் இந்தியாவில் தங்கிக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மார்பகப் புற்றுநோய்...
இதற்கிடையே சமீபத்தில் தஸ்லிமாவுக்கு மார்பகப் புற்றுநோய் உண்டாகி இருப்பதாக சந்தேகிக்கப் பட்டது. கோடை விடுமுறைக்காக அமெரிக்கா சென்ற தஸ்லிமாவுக்கு மார்பகத்தில் கட்டி ஒன்று இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
சிகிச்சை...
தஸ்லிமாவின் குடும்பமே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்க, பயாப்ஸி சோதனையில் இவருக்கும் அந்நோய் பாதிப்பு இருக்கிறதா என சோதிக்கப்பட்டது. மருத்துவ சோதனைகளின் முடிவில் தஸ்லிமாவிற்கு புற்றுநோய் பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளதாக மே மாதம் அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.