தெலுங்குதேசத்துடனான கூட்டணி சிக்கல் தீர்ந்தது! 3 சட்டசபை தொகுதிகளை திரும்ப கொடுத்தது பாஜக!!
ஹைதரபாத்: சீமாந்திராவில் எகிறிக் கொண்டிருந்த தெலுங்குதேசத்தை சமாதானப்படுத்தும் வகையில் தமக்கு ஒதுக்கப்பட்ட 3 சட்டசபை தொகுதிகளை ஒப்படைத்துவிட்டது பாஜக. இதனைத் தொடர்ந்து தெலுங்குதேசத்துடனான கூட்டணி தொடருவதாக பாஜகவின் ஜவதேகர் தெரிவித்துள்ளார்.
சீமாந்திராவில் தெலுங்குதேசத்துடன் பாஜக கூட்டணி வைத்து தொகுதிகளையும் பெற்றுக் கொண்டது. ஆனால் அந்த தொகுதிகளிலும் கூட தெலுங்குதேசம் சொல்கிற வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று புதிய கூட்டணி தர்ம விதிகளை சொன்னார் சந்திரபாபு நாயுடு.
அத்துடன் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் எல்லாம் தெலுங்குதேசம் கட்சியினரையும் வேட்புமனுத் தாக்கல் செய்ய வைத்தார் நாயுடு. அம்மாநிலத்தில் வேட்புமனுக்களை திரும்பப் பெற நாளைதான் கடைசிநாள். அதனால் பெரும் குழப்பத்தில் மூழ்கிப் போன பாஜக எப்படியாவது சந்திரபாபுவை சமாதானப்படுத்தி போட்டி வேட்புமனுக்களை வாபஸ் பெற வைக்க போராடியது.
இதைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவை பாஜகவின் ஆந்திர மாநில பொறுப்பாளர் ஜவதேகர் இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளை மீண்டும் தெலுங்குதேசத்திடம் ஒப்படைக்க பாஜக முன்வந்துள்ளது. இதற்கு மாற்றாக 2 எம்.எல்.சிகளை கொடுக்கவும் தெலுங்குதேசம் ஒப்புக் கொண்டுள்ளது.
இதனால் தெலுங்குதேசத்துடனான பாஜகவின் கூட்டணி சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர் ராஜ் புரோகித்தும் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.