தமிழ்நாட்டிலும் இனி "தெலுங்கு தேசம்"... தலைவர் "மாங்கனி" முருகேசன்!
சென்னை: சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அகில இந்தியக் கட்சியாக மாற்றப்பட்டு வருவதையொட்டி அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் அதன் கிளையைத் திறந்துள்ளனர்.
தமிழக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக மாங்கனி முருகேசன் என்பவரை அறிவித்துள்ளனர். இவர் யார் என்றே தெரியவில்லை. இனிமேல் இவரும் கட்சித் தலைவராக கரை வேட்டியுடன் வலம் வரவுள்ளார்.
தமிழக தெலுங்கு தேசம் கட்சியின் தொடக்க விழாவில் கர்நாடக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான வெங்கடேசப்பா என்பவர் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் முருகேசன் பேசுகையில், கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, என்னை தமிழ்நாடு மாநில தலைவராக நியமித்துள்ளார். தமிழகத்தில் உள்ள தெலுங்கு இன சமுதாயத்தினரின் பிரச்னைகளை முன்னெடுத்துச் செல்ல, முறையான தலைவர் இதுவரை இல்லை. வரும் நாட்களில், இந்த சமுதாயத்தினரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, முழுமையாக பாடுபடுவேன் என்றார் முருகேசன்.