இலவசமா போன் கொடுத்து, 5 ரூபாய்ல சாப்பாடும் போடுவோம் - தெலுங்குதேசத்தின் அபார ''தேர்தல் ஆபர்''
ஹைதராபாத்: வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் தெலுங்கு தேசம் கட்சி பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அவர்களது அறிக்கையை பார்த்து பலர் தலை சுற்றி போயுள்ளனர்.
இது வெறும் அறிக்கை மட்டுமா இல்லை உண்மையிலேயே நிறைவேற்றப்படுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். காரணம் சொல்லப்பட்டுள்ள அம்சங்கள் அப்படி உள்ளன.
கட்சி தேர்தல் அறிக்கை:
தெலுங்கு தேசம் கட்சி லோக்சபா தேர்தலுக்கான கட்சி அறிக்கையை நேற்று வெளியிட்டது.அதில் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவசமாக கைபேசி,வெறும் 5 ரூபாய்க்கு முழுச் சாப்பாடு என்று கிறுகிறுக்க வைக்கும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
ஆந்திர தேர்தல் அறிவிப்புகள்:
ஆந்திராவில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் இம்மாதம் 30 மற்றும் அடுத்த மாதம் 7 ஆம் தேதி அன்று நடக்கவுள்ளது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி இதற்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த தேர்தல் அறிக்கை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இலவச கைப்பேசி திட்டம்:
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து பெண்களுக்கும், இலவசமாக மொபைல் போன் வழங்கப்படும். பெண்கள் சுய உதவிக் குழுக்களின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.
மாதா மாதம் ரூ. 2000 உதவித் தொகை:
வேலையில்லா இளைஞர்களுக்கு, மாதம் 2,000 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். மாநிலம் முழுவதும், தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.
மினரல் வாட்டர் சர்வீஸ்:
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 ரூபாய்க்கு, 20 லிட்டர் மினரல் வாட்டர் வழங்கப்படும்.
ஏழைகளுக்கு இலவச நிலம்:
நிலமற்ற ஏழைகளுக்கு, இரண்டு ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும்.
என்டிஆர் இலவச காப்பீட்டுத் திட்டம்:
என்.டி.ஆர்., இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டம் மூலம் சிறந்த சிகிச்சை அளிக்கப்படும்.
5 ரூபாய்க்கு சாப்பாடு:
விவசாயிகளின் மின்தேவைக்காக சூரிய ஒளிமின் தகடுகள் அமைக்க 75 சதவீதம் மானியம் வழங்கப்படும்.மலிவு விலை உணவகங்கள் மூலம் 5 ரூபாய்க்கு சாப்பாடு விற்கப்படும்.
கர்ப்பிணிகளுக்கு உதவித் தொகை:
கர்ப்பிணி பெண்களுக்கு ஆறு மாதங்கள் வரை ஒவ்வொரு மாதமும் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
முதல் அமைச்சர் பதவி:
தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தால் மாநிலத்தின் முதல் முதல்வராக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவார் என்றெல்லாம் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.