ஜெயலலிதா, விஜய்காந்தே பரவாயில்லை.. இப்படி பீதி கிளப்பி மிரட்டுகிறாரே நாயுடு: புலம்பும் பா.ஜ.க!!
ஹைதராபாத்: சீமாந்திராவில் தெலுங்குதேசம், பாரதிய ஜனதா இடையேயான கூட்டணி முறிவின் விளிம்பில் நிற்கிறது. தமது கட்சி விரும்பும் வேட்பாளர்களைத்தான் பாரதிய ஜனதா நிறுத்த வேண்டும் என்று தெலுங்கு தேசம் அடம்பிடிப்பதே கூட்டணி சிக்கலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சீமாந்திராவில் தெலுங்குதேசம் கட்சி, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைப்பதாக 11 நாட்களுக்கு முன்பு அறிவித்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்திருப்பதாக பெருமைப்பட்டுக் கொண்டன.
இரு கட்சிகளிடையே தொகுதி உடன்பாடும் எவ்வித பிரச்சனையும் இன்றி சுமூகமாக அமைந்தது. சீமாந்திராவில் 14 சட்டசபை தொகுதிகளும் 4 லோக்சபா தொகுதிகளும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டன. மேலும் 2 எம்.எல்.சி. இடங்களும் பாஜகவுக்கு வழங்கப்படும் என்பதுதான் தேர்தல் உடன்பாடு.
ஆனால் சீமாந்திரா சட்டசபைக்கும், சீமாந்திராவில் லோக்சபா தொகுதிகளுக்கும் பாரதிய ஜனதா கட்சி அறிவித்த வேட்பாளர்களால் தெலுங்கு தேசம் கொந்தளித்துப் போனது.
அதெப்படி புரந்தரேஸ்வரிக்கு சீட் கொடுக்கலாம்?
குறிப்பாக காங்கிரஸ் இருந்து தாவிய என்.டி.ஆர். மகளான புரந்தேரஸ்வரிக்கு பாரதிய ஜனதா கட்சி ராஜம்பேட் லோக்சபா தொகுதியை ஒதுக்கியது. இது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகனின் கோட்டை. நிச்சயம் இங்கு புரந்தரேஸ்வரி தோற்கத்தான் போகிறார் என்கிறார்கள் அவர்களது ஆதரவாளர்கள். ஆனால் சந்திரபாபு நாயுடுவோ, தோற்றாலும் பரவாயில்லை புரந்தரேஸ்வரிக்கு நீங்கள் சீட்டுக் கொடுக்க கூடாது என்று அடம் பிடிக்கிறார்.
குடும்ப பஞ்சாயத்து
புரந்தரேஸ்வரி, சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரியின் உடன் பிறந்த சகோதரி ஆவார். ஆனால் காங்கிரசை எதிர்த்து தெலுங்கு தேசம் தொடங்கிய தந்தை என்.டி.ராமராவை அவமதிக்கும் வகையில் புரந்தரேஸ்வரி காங்கிரசில் இணைந்தது என்.டி.ராமராவ் குடும்பத்தினருக்கு பிடிக்க வில்லை. இந்த குடும்ப பஞ்சாயத்துதான் தேர்தல் வீதியில் சந்தி சிரிக்கிறது.
ஏன் கிருஷ்ணம் ராஜூவுக்கு சீட் கொடுக்கலை?
அதேபோல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவுக்கு தாவியவர் தொழிலதிபர் கிருஷ்ணம் ராஜூ. அப்போதே பாஜக மேலிடத்தில் பேசி உங்களுக்கு நரசபூர் லோக்சபா தொகுதியை வாங்கித் தருவதாக சந்திரபாபு நாயுடுவும் உறுதியளித்திருந்தார். இதேபோல் நாயுடுவிடமும் கிருஷ்ணராஜூவுக்கு சீட் தருவாக பாஜக உறுதியளித்தாக சொல்லப்படுகிறது,
ஏட்டிக்குப் போட்டி வேட்பு மனு
ஆனால் நரசபூர் லோக்சபா தொகுதி வேட்பாளர் பட்டியலில் கிருஷ்ணம் ராஜூ பெயர் இல்லை. அங்கு விஸ்வ ஹிந்து பரிஷத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நியமித்திருக்கிறது பாரதிய ஜனதா. இதில் நாயுடு கடும் அதிருப்தி அடைந்ததுவிட்டாராம்.
பின்னர் நாயுடுவுடன் ஆலோசனை நடத்திய கிருஷ்ணம் ராஜூ, நரசபூர் தொகுதியில் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். அதேபோல் அங்கு தெலுங்குதேசம் மற்றும் பாஜகவினரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் கிருஷ்ணம் ராஜூ, பாஜகவின் அதிகாரப்பூர்வ கடிதம் இல்லாமல் வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார். எப்படியும் கிருஷ்ணம் ராஜூவுக்கு சீட் வாங்கி விடுவது என்பதில் நாயுடு நம்பிக்கையோடு இருக்கிறாராம்.
பாஜக தொகுதிகளில் தெ.தேசமும் வேட்புமனுத்தாக்கல்!
அத்துடன் பாஜகவுக்கு கொடுக்கப்பட்ட 14 சட்டசபை தொகுதிகளில் 4 தொகுதி வேட்பாளர்கள் பலவீனமானவர்கள் என்பதால் அந்த 4 தொகுதிகளையும் தெலுங்குதேசம் வசம் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கிடம் நாயுடு வலியுறுத்தியிருக்கிறது. அத்துடன் சர்ச்சைக்குரிய இந்த நெல்லூர் புறநகர், தடேகப்பல்லிகுடெம், சந்தானனுதலபாடு மற்றும் ராஜமுந்திரி நகரம் ஆகிய தொகுதிகளிலும் தமது கட்சி வேட்பாளர்களை நேற்று வேட்புமனுவும் தாக்கல் செய்ய வைத்துவிட்டார் நாயுடு.
4 தொகுதிகளை சரண்டர் செய்யுங்க..
இந்த 4 தொகுதிகள் மட்டுமல்ல பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட படேரு, இச்சாபுரம், கைகலூர், கடப்பா, மதனபள்ளி, அரகு மற்றும் ரஜோல் ஆகிய தொகுதிகளிலும் கூட தெலுங்குதேசம் கட்சியினர் வேட்புமனுத் தாக்கல் செய்து பாஜகவை பீதிக்குள்ளாக்கி வைத்திருக்கிறார்கள்.
கூடுதலா 2 எம்.எல்.சி. சீட்
நாளை ஆந்திராவில் வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசிநாள்.. அதனால் தாங்கள் சொல்கிற படி தொகுதிகளை விட்டுக் கொடுத்து தாங்கள் சொல்கிற நபர்களுக்கே சீட் கொடுத்தால் மட்டுமே கூட்டணி.. அப்படி செய்தால் பாஜகவுக்கு கூடுதலாக 2 எம்.எல்.சி சீட் தரவும் தயார் என்பது தெலுங்குதேசத்தின் பேரம்.
மோடி மீது நாயுடுவுக்கு கோபம்
அத்துடன் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள நரேந்திர மோடி மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் நாயுடு செம கோபத்தில் இருக்கிறாராம். இந்த நிலையில் பாரதிய ஜனதாவை மிரட்டும் வகையில் விஜயநகரம் மாவட்டம் கஜபதிநகரத்தில் நேற்று இரவு நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, பாரதிய ஜனதா கட்சி பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதனால் நமது இரண்டு கட்சிகளுக்குமே எந்த ஒரு பயனையும் தராது. இப்படி பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தினால் எதிர்க்கட்சிகளே பயனடைவர்.
விலகப் போகிறோம்.. பீதி கிளப்பிய நாயுடு
ஆகையால் சீமாந்திராவில் பாஜக கூட்டணியில் இருந்து நாம் விலகும் முடிவை எடுக்கிறோம் என்று கூறி பாஜகவை மேலும் பீதிக்குள்ளாக்கிவைத்திருக்கிறார். இதனிடையே பாஜகவின் பிரகாஷ் ஜவேத்கர், சந்திரபாபு நாயுடுவை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் நாயுடுவோ, சொல்வதை கேட்டால் கூட்டணி.. இல்லையெனில் என் வழி தனிவழி என மிரட்டிக் கொண்டிருக்கிறாராம்..
விஜயகாந்த் பரவாயில்லை..
தமிழகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தொகுதி கேட்டுத்தான் பிடிவாதம் பிடித்தார். அதையே சமாளிக்க முடியாமல் பாஜக திணறியது.. ஆந்திராவிலோ தொகுதியையும் கொடுத்து நாங்க சொல்ற வேட்பாளரையும் நிறுத்த வேண்டும் என்று சொல்கிற சந்திரபாபு நாயுடுவை பீதியுடன் பார்த்தபடியே விஜயகாந்த் பரவாயில்லையே என்கிறது பாஜக தரப்பு.