சீமாந்திராவுடன் 7 மண்டலங்களை இணைக்க எதிர்ப்பு: தெலுங்கானாவில் இன்று முழு அடைப்பு
நகரி: சீமாந்திராவுடன் 7 மண்டலங்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானாவில் இன்று (வியாழக்கிழமை) முழுஅடைப்பு போராட்டத்துக்கு ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
ஆந்திர மாநிலம் தெலுங்கானா மற்றும் சீமாந்திரா என பிரிவினை செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து வரும் 2ம் தேதி இரு மாநிலங்கள் உதயமாகிறது.
ஆந்திர மாநிலம் ஒன்றாக இருந்த போது மறைந்த முதல்வர் ராஜசேகரரெட்டி ஏற்பாட்டின்பேரில் கம்மம் மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் போலவரம் என்ற அணைக்கட்டு அமைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
தெலுங்கானா கம்மம் மாவட்டத்தில் உள்ள 7 மண்டலங்கள் சீமாந்திராவுடன் இணைப்பது என மாநில பிரிவினையின்போது முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவர்கள் லோக்சபா தேர்தலையும் புறக்கணித்தனர்.
இந்த மண்டலங்கள் பிரிவினை செய்யும்போது அணைக்கட்டு பகுதி சீமாந்திராவுக்கு போய்விடும் என கூறப்படுகிறது.
தற்கு முன்னர் எதிர்ப்பு தெரிவிக்காமல் திட்டத்தை மாற்ற வேண்டும் என்று ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவ் கூறியதாக தெரிகிறது. ஆனால் தற்போது இந்த 7 மண்டலங்கள் சீமாந்திராவுடன் இணைவதற்காக மத்திய அமைச்சரவையில் முடிவு எடுத்து குடியரசுத்தலைவரின் அனுமதி பெற அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் குடியரசுத்தலைவர் கையெழுத்து போடக்கூடாது என்று வலியுறுத்தி தெலுங்கானா பகுதியில் இன்று (வியாழக்கிழமை) முழுஅடைப்பு போராட்டத்துக்கு சந்திரசேகரராவ் அழைப்பு விடுத்து உள்ளார்.
இந்த முழுஅடைப்புப் போராட்டத்துக்கு 7 மண்டலங்களில் உள்ள 205 கிராமத்தை சேர்ந்த மக்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள், அனைத்து தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன.
முழுஅடைப்புக்கு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது குறித்து ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவ் கூறியதாவது:
இரு மாநில முதல்வர் பதவி ஏற்காத நிலையில் கம்மம் மாவட்டத்தில் உள்ள 7 மண்டலத்தை பிரிக்க அவசர அவசரமாக பதவி ஏற்றவுடனேயே மத்திய அரசு இணைக்க முயற்சிப்பது ஏற்புடையது அல்ல.
மத்திய அரசு சந்திரபாபுநாயுடு, மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு ஆகியோரின் கருத்துக்களை ஏற்று இவ்வாறு செயல்படுகிறது. இந்த பிரச்சினையில் இரு மாநில முதல்வர் முன்னிலையில் பேச்சு நடத்தி சுமுக தீர்வு காண வலியுறுத்தியும், 7 மண்டல பிரிவினைக்கு குடியரசுத்தலைவர் கையெழுத்திடக்கூடாது எனக்கோரியும் தெலுங்கானாவில் முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.