'ரவுடி'.. ஜெயசுதா படத்தைத் தடை செய்ய தெலுங்கானா வக்கீல்கள் போர்க்கொடி!
ஹைதராபாத்: நடிகை ஜெயசுதா, மோகன்பாபு இணைந்து நடித்துள்ள ரவுடி என்ற தெலுங்குப் படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று தெலுங்கானாவைச் சேர்ந்த வக்கீல்கள் அமைப்பு தேர்தல் ஆணையத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
காங்கிரஸைச் சேர்ந்த ஜெயசுதா, செகந்திரபாத் சட்டசபைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் ஜெயசுதா - மோகன்பாபு இணைந்து நடித்துள்ள ரவுடி என்ற படம் அங்கு திரைக்கு வந்துள்ளது.
இப்படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியுள்ளார். படத்தில் ஜெயசுதாவுக்கு சக்தி வாய்ந்த கதாபாத்திரம். இதனால் ஜெயசுதாவின் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தெலுங்கானா சேர்ந்த வக்கீல் சங்கம் இப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சங்கம் சார்பில் நரசிம்மா ரெட்டி என்பவர், தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளார்.
அதில், தேர்தலில் போட்டியிடும் நடிகர், நடிகைகளின் படத்தை டி.வி.யிலும், திரையரங்கத்திலும் ஒளிபரப்பக் கூடாது என்று விதி உள்ளது. ஆனால் ஜெயசுதா படம் திரையிடப்பட்டுள்ளது. வாக்காளர்களை கவர வழி வகுக்கிறது எனவே அந்த படத்தை ஒளிபரப்ப தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.