"ஐஸ் பக்கெட்"டை விடுங்க... நீங்க "ரைஸ் பக்கெட்" சவாலுக்கு ரெடியா...?
ஹைதராபாத்: உலகம் முழுவதும் "ஐஸ் பக்கெட்" சவால் பிரபலமாகியுள்ள நிலையில் அதே பாணியில் "ரைஸ் பக்கெட்" சவாலை இந்தியாவில் கொண்டு வந்து விட்டார் ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சு லதா கலாநிதி என்ற பெண்மணி.
எப்படி ஐஸ் பக்கெட் சவால் ஒரு நல்ல நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதோ அதேபோல இந்த ரைஸ் பக்கெட் சவாலும் நல்ல உன்னதமான நோக்கத்திற்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறுகிறார் மஞ்சு லதா கலாநிதி.
இது ஐஸ் பக்கெட் சவாலை விட மிகவும் எளிதானது, இலகுவானது என்பது மஞ்சுவின் கருத்து.
ஏழைகளுக்கு உதவ
சாப்பிடக் கூட வழியில்லாத ஏழைகளுக்கு உதவுவதற்காக இந்த ரைஸ் பக்கெட் சவாலை கொண்டு வந்துள்ளாராம் மஞ்சு.
பேஸ்புக்கில் பக்கம்
இதற்காக பேஸ்புக்கில் ஒருபக்கத்தைத் திறந்துள்ளார் மஞ்சு. அதில் ரைஸ் பக்கெட் சவாலில் பங்கேற்றவர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
என்ன செய்யனும்...
மிகவும் சிம்பிள். உங்களால் முடிந்த அரிசி அல்லது சாதத்தை ஏழைகளுக்கு வழங்க வேண்டும். ஒரு பக்கெட் என்ற அளவில் இல்லாவிட்டாலும் கூட ஒரு கைப்பிடி அரிசியாவது தானமாக தரலாம். பின்னர் அதைப் புகைப்படமாக எடுத்து இவர்களுக்கு அனுப்பி வைக்கலாம், அதை இவர்கள் தங்களது பேஸ்புக் பக்கத்தில் போடுவார்கள். அல்லது நீங்களே உங்களது பேஸ்புக்கில் போட்டு #RiceBucketChallenge என்ற ஹேஷ்டேக் வாசகத்துடன் நண்பர்களுடன் ஷேர் செய்யலாம்.
செய்ய முடியாட்டி
இப்படி அரிசி அல்லது சாதம் தானம் செய்ய முடியாதவர்கள், அருகில் உள்ள அரசு மருத்தவமனைக்கு ரூ. 100 மதிப்புள்ள மருந்துகளை வாங்கித் தரலாமாம்.
செம வரவேற்பு
மஞ்சுவின் இந்த புதிய முயற்சிக்கு உடனடியாக ஆதரவுகள் குவிந்து விட்டன. ஆயிரக்கணக்கானோர் இதை வரவேற்று லைக் செய்து வருகின்றனர்.
நல்ல முயற்சிதான்.. பாராட்டுவோம் மஞ்சுவை!