24 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் லாலு, நிதிஷ்!
பாட்னா: அரசியலில் எலியும் பூனையுமாக இருந்த பீகார் முன்னாள் முதல்வர்கள் நிதிஷ்குமாரும் லாலுபிரசாத் யாதவும் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளனர்.
பீகாரில் 1970களில் ஜனதா கட்சியின் இளந்தலைவர்களாக திகழ்ந்தவர்கள் லாலு பிரசாத் யாதவும் நிதிஷ்குமாரும். பின்னர் இருவரும் தனித்தனி கட்சிகள் காண பீகார் அரசியலில் இரு துருவங்களாகவும் மாறிப் போயினர்.
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம். 9 ஆண்டுகால கூட்டணியை லோக்சபா தேர்தலை முன்னிட்டு கைவிட்டார் நிதிஷ்குமார்.
ஆனால் லோக்சபா தேர்தலில் நிதிஷூம், லாலுவும் எதிர்பார்க்காத வகையில் பாரதிய ஜனதா பெரும் வெற்றி பெற்றது. இதனால் லாலுவும் நிதிஷும் இணைந்து செயல்பட வேண்டிய நிலை உருவானது.
முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் விலகினாலும் ஆளும் ஐக்கிய ஜனதா தள அரசுக்கு ஆதரவு தருவதாக லாலு அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 21-ந் தேதி 10 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளமும் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி அமைப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் லாலுவும் நிதிஷ்குமாரும் இணைந்து இடைத்தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர். 24 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் நிதிஷ்குமாரும் லாலு பிரசாத் யாதவும் ஒரே மேடையில் பேச இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதே நேரத்தில் இருவரும் தோல்வி அச்சத்தால்தான் ஒன்றாக இணைந்துள்ளனர்.. இதுபற்றியெல்லாம் கவலை எதுவும் இல்லை என்கிறது பாரதிய ஜனதா.