பிரிவுக்கு முன்பு ஆந்திரா சந்திக்கும் கடைசி தேர்தல்
ஹைதராபாத்: தெலங்கானா மற்றும் சீமாந்திரா பகுதிகளில் ஏப்ரல் 30 மற்றும் 7ம்தேதிகளில் தனித்தனியே சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்கும் சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. தெலங்கானாபோக பிற பகுதிகள் சீமாந்திரா என்று அழைக்கப்படும். இருப்பினும் வரும் ஜூன் மாதம் 2ம்தேதி முதல்தான் இந்த மாநில பிரிப்பு நடைமுறைக்கு வரும். அதுவரை இரு பிராந்தியங்களும் ஆந்திராவாகவே தொடருகின்றன. இருப்பினும் தேர்தல் ஆணையம் இரு பகுதிகளிலும் உள்ள மக்களவை மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கு தனித்தனியாக தேர்தலை நடத்த உள்ளது.
ஆந்திராவில் மொத்தம், 42 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் 25 தொகுதிகள் சீமாந்திராவிலும், 17 தொகுதிகள் தெலங்கானாவிலும் வருகின்றன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமித்தி, காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, பாஜக மற்றும் இடதுசாரிகள் முக்கியமான போட்டியாளர்கள். அதில் நீண்ட இழுபறிக்குப்பிறகு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் மற்றும் பாஜக இடையே தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே காங்கிரசில் இருந்து பிரிந்து வந்து பாஜகவில் இணைந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் புரந்தரேஷ்வரிக்கு தற்போது அவர் எம்பியாக உள்ள விசாகபட்டணம் தொகுதியை ஒதுக்க பாஜ மறுத்துள்ளது. தோழமை கட்சியான தெலுங்கு தேச மேலிட தலைவர்கள் எதிர்ப்பால் பாஜக இம்முடிவை எடுத்ததாக தெரிகிறது.
தொகுதி பங்கீடுப்படி, தெலங்கானா பகுதியில் 47 சட்டசபை தொகுதிகளிலும், 8 மக்களவை தொகுதிகளிலும் பாஜ போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளில் தெலுங்கு தேசம் கோதாவில் குதிக்கிறது. சீமாந்திராவில் 4 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 15 சட்டசபை தொகுதிகளிலும் பாஜ போட்டியிடுகிறது.
புரந்தரேஷ்வரிக்கு விசாகபட்டணம் அளிக்காமல் இழுத்தடித்தாலும், பிற விஷங்களில் தெலுங்கு தேசம் கூறுவதை ஏற்க பாஜ மறுத்துவருகிறது. பாஜ நிறுத்தியுள்ள வேட்பாளர்கள், மக்கள் மத்தியில் போதிய அளவுக்கு செல்வாக்கு இல்லாதவர்கள் என்று கூறும் தெலுங்கு தேச தலைவர்கள், அதில் பலரை மாற்ற வேண்டும் என்று கெடுவிதித்து வருவதால், இக்கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
1999ம் ஆண்டு, பாஜக-தெலுங்கு தேசம் இடையேயான கூட்டணி 36 லோக்சபா இடங்களை கைப்பற்றியது. ஆனால் 2004ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சியை பிடித்த பிறகு ஆந்திராவில் பாஜ கூட்டணி எடுபடவில்லை.
நடைபெற உள்ள தேர்தலில் வாக்களிக்க ஆறு கோடியே 24 லட்சம்பேர் தகுதியுடையவர்கள். மாநிலம் முழுவதிலும் மொத்தம் 69ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தெலங்கானா மாநிலம் கேட்டு ஒரு பிரிவு மக்களும், ஆந்திராவை பிரிக்க கூடாது என்று கேட்டு மற்றொரு பிரிவு மக்களும் போராட்டங்கள் நடத்தியதால் ஆந்திரா கலவர பூமியாக காட்சியளித்தது. மாநில பிரிவினை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நடைபெறும் முதலாவது தேர்தல் என்பதால் பலத்த பாதுகாப்பு அளிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.