இடிந்தகரை பெண்களுடன் டெல்லியில் கனிமொழியைச் சந்தித்தார் உதயக்குமார்
டெல்லி: டெல்லி சென்றுள்ள கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார், இன்று திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழியைச் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது இடிந்தகரையிலிருந்து வந்திருந்த பெண்களும் கனிமொழி சந்திப்பின்போது உடன் இருந்தனர்.
உதயக்குமார் டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவரும் கெஜ்ரிவாலும், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்புக்கு மத்திய அமைச்சரும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான பொன் ராதாகிருஷ்ணன் ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திமுக எம்.பி. கனிமொழியை உதயக்குமார் சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது, கூடன்குளத்தில் 3, 4வது அணுஉலைகளை அமைக்கக் கூடாது என நாடாளுமன்றத்தில் வலியுறுத்துமாறு அவர் கோரிக்கை வைத்தார். இதேபோல பிற கட்சித் தலைவர்களையும் தாங்கள் சந்தித்து அணு மின் நிலையத்துக்கு எதிராக ஆதரவு திரட்டவிருப்பதாக உதயக்குமார் தெரிவித்துள்ளார். அதேசமயம், பாஜக, காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இடிந்தகரை பிரதிநிதிகளுடன் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா, அசுதோஷ், சஞ்சய் சிங், யோகேந்திர யாதவ், பிரஷாந்த் பூஷன், மேதா பட்கர், தயாமணி பர்லா, மகலீன் பீட்டர், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கோவிந்தாச்சார்யா ஆகியோரையும் இக்குழுவினர் சந்தித்தனர்.
மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், ஜிதேந்திரா சிங் மற்றும் பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் ஆகியோரையும் சந்திக்க இவர்கள் முயற்சித்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அது நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.