‘பலாத்காரங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்’... பெங்களூர் புதிய போலீஸ் கமிஷனர் சபதம்!
பெங்களூர்: பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார் பெங்களூர் மாநகரத்தின் புதிய போலீஸ் கமிஷனராக பதவி ஏற்றிருக்கும் எம்.என்.ரெட்டி.
கடந்த வாரம் பெங்களூர் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு மாணவி ஒருவர், அதே பள்ளியில் வேலை பார்க்கும் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் காவலாளியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். கல்வி பயிலும் இடத்தில் நடந்த இந்தக் கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை பெங்களூர் போலீஸ் கமிஷனராக இருந்த ராகவேந்திரா அவுராத்கர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நேற்றிரவே பெங்களூர் மாநகர புதிய போலீஸ் கமிஷனராக எம்.என்.ரெட்டி பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
அவரிடம் முன்னாள் போலீஸ் கமிஷனர் ராகவேந்திரா அவுராத்கர் பொறுப்புகளை ஒப்படைத்தார். மேலும் புதிய போலீஸ் கமிஷனருக்கு ராகவேந்திரா அவுராத்கர் பூச்செண்டு கொடுத்து வாழ்த்துக்களை கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு புதிய போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நன்றி...
பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனராக என்னை நியமித்த கர்நாடக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
பெண்கள் பாதுகாப்பு..
பெங்களூர் நகரில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதே எனது முதல் கடமையாகும். அத்துடன் பாலியல் பலாத்காரங்கள், கற்பழிப்பு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முழு நடவடிக்கை எடுப்பேன்.
உரிய நடவடிக்கை...
சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். பொதுமக்கள் புகார் கொடுத்தவுடன் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படும். அதன்பேரில் உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஒத்துழைப்பு...
அதனைத் தொடர்ந்து ராகவேந்திரா அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த 17 மாதம் பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றியதில் திருப்தி அடைகிறேன். எனக்கு கர்நாடக அரசு, போலீசார், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
அரசு உத்தரவு...
தற்போது போலீஸ் கமிஷனராக பொறுப்பு ஏற்றுள்ள எம்.என்.ரெட்டி, மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் சிறந்து விளங்கினார். அவர் பெங்களூர் நகர மக்களுக்கும் உரிய பாதுகாப்பை அளிப்பார். அரசு அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்வது வழக்கமான ஒன்று தான். அரசு உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன்," எனத் தெரிவித்தார்.