பட்ஜெட்: ரஜினி ரூ.1 கோடி தருவதாக சொன்ன நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
டெல்லி: நதிகள் இணைப்பு திட்டம் குறித்த பூர்வாங்க ஆய்வு பணிகளுக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2014-2015ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சரி அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுத் திட்டமான நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்த திட்டம் குறித்த பூர்வாங்க ஆய்வு பணிகளுக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்பு காவிரி பிரச்சனை ஏற்பட்டபோது திரையுலக பிரபலங்கள் போராட்டத்தில் குதித்தனர். அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நதிகளை இணைக்க அரசு முன்வந்தால் தன் பாக்கெட்டில் இருந்து ரூ.1 கோடி தருவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.