இந்தியாவிலேயே உ.பி.யில் தான் மதக் கலவரச் சாவுகள் அதிகம்... அமெரிக்கா திடுக் தகவல்
லக்னோ: இந்தியாவில் மதக் கலவரங்களில் அதிகளவு உயிரிழப்புகள் உத்தரப்பிரதேச மாநிலத்திலேயே நிகழ்வதாக அமெரிக்க ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் மதக்கலவரங்கள் பெரும் பிரச்சினையாக உள்ளன. இந்நிலையில் சர்வதேச மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
அந்த ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது :-
மனித உரிமை ஆர்வலர்கள்...
இந்தியாவில் மத சுதந்திரத்துக்கான உரிமைகளுக்கு போதிய சட்ட பாதுகாப்பு இருந்து, அவற்றை அரசு அமல்படுத்தி வந்தாலும், சில தனி நபர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் ஒரு தரப்பினருக்கு இழைக்கப்படும் தீங்குகளுக்கு எதிராக இவை தீவிர பலனை அளிப்பதில்லை என்று மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.
தண்டனை கிடையாது....
சிறுபான்மை சமூகத்தினர் தாக்குதலுக்கு உள்ளாகும் போது எதிர் தரப்பினருக்கு எதிராக இந்த சட்டங்களை பிரயோகித்து, வழக்காடி தண்டனை பெற்றுத் தர அதிகாரிகள் தவறி விடுகின்றனர். மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகளோடு சரி, யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை என்ற நிலையே நீடித்து வருகிறது.
முதன்மை மாநிலம்...
இந்தியாவிலேயே பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மதக் கலவரச் சாவுகளில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதக்கலவரம்...
சமீபகாலமாக உத்திரப்பிரதேசத்தில் பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். கடந்த வாரம் உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.