தலித்துகளுக்கு முடிவெட்டும் சலூன்களில் முடிவெட்ட பிறஜாதியினர் மறுப்பு- நாட்டில் தொடரும் ஜாதி அவலம்
பெல்லாரி: தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு முடிவெட்டிவிட்ட சலூன் கடைகளில் நாங்கள் முடிவெட்ட மாட்டோம் என்று பிற ஜாதிக்காரர்கள் அடாவடி செய்யும் சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசயத்தில், அரசு, தலையிட்டு பாதிக்கப்பட்ட சலூன் கடைக்காரர்களுக்கு நிதி உதவி அளித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் தலூர் கிராமத்தில் மொத்தம் ஐந்து சலூன் கடைகள் உள்ளன. இந்த சலூன் கடைகளில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்களுக்கு முடிதிருத்துவதோ, ஷேவிங் செய்வதோ கூடாது என்று பிற ஜாதிக்காரர்கள் கறாராக கூறியுள்ளார்கள். அந்த கிராமத்தை பொறுத்தளவில் தாழ்த்தப்பட்டோர் எண்ணிக்கையில் குறைவு என்பதால் பிற ஜாதிக்காரர்கள் சொல்வதை கேட்டுக்கொள்ள சலூன்கடைக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் முடிவெட்ட வந்த தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த ஒருவருக்கு, முடிவெட்ட முடியாது என்று, முடிதிருத்தும் தொழிலாளி மறுப்பு தெரிவித்துள்ளார். பிற சலூன்களிலும் இதே பதில் வந்துள்ளது. இதனால் கோபமடைந்த தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கும், சலூன் கடை வைத்திருப்போருக்கும் நடுவே மோதல் வெடித்துள்ளது.
முடிவெட்டினால் பிற ஜாதிக்காரர்களும், வெட்டாவிட்டால் தாழ்த்தப்பட்ட ஜாதியினரும் சண்டைக்கு வருவதால், எதற்கு வம்பு என்று அந்த கிராமத்தின் ஐந்து சலூன் கடைகளும் ஐந்து நாட்களாக மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகிய நிலையில், சமூக நலத்துறை அதிகாரிகள் அக்கிராமத்துக்கு சென்று சலூன் கடைக்காரர்களை கடை திறக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். தலித்துகளுக்கு முடிதிருத்துமாறும் உத்தரவிட்டனர். இதையடுத்து சலூன்களில் பழையபடி முடிதிருத்தம் செய்யப்பட ஆரம்பிக்கப்பட்டது.
இதனால் கோபமடைந்துள்ள பிற ஜாதிக்காரர்கள் நாலாயிரம்பேரும், தங்கள் ஊரிலுள்ள சலூன்களில் முடிவெட்டுவதில்லை என்று தீர்மானித்துவிட்டனராம். இக்கிராமத்தில் 100 தாழ்த்தப்பட்டோர் மட்டுமே உள்ள நிலையில், சலூன்கடைகளின் பெருவாரியான வாடிக்கையாளர்கள் பிற ஜாதியினர்தான். பிறஜாதியினரின் புறக்கணிப்பால், சலூன்கடைக்காரர்கள் வயிற்றில் அடி.
இதுகுறித்து சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சநேயாவை சந்தித்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் முறையிட்டுள்ளனர். நிலைமையை புரிந்துகொண்ட அமைச்சர், 24 மணி நேரத்திற்குள், பாதிக்கப்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் 7 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் உதவித்தொகைக்கான காசோலையை வழங்கியுள்ளார். மேலும்11 முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அடுத்தகட்டமாக இதே நிதி வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். கிராம மக்கள் மனதில் புரையோடிப்போயுள்ள ஜாதிய வேற்றுமை மனப்பாங்கை வேரறுக்கும்வகையிலான, விழிப்புணர்வு வழங்க அரசு முயற்சி செய்யும் என்றும் அமைச்சர் ஆஞ்சநேயா கூறினார்.