சிவில் சர்வீஸ் தேர்வு விவகாரம்- நாடாளுமன்றத்தில் கடும் அமளி!!
டெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வில் சிசாட் எனப்படும் திறனாய்வு தேர்வு முறையை கைவிடக் கோரும் விவகாரத்தால் நாடாளுமன்ற இரு சபைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது.
பிரச்சனைக்குரிய CSAT
மத்திய அரசு தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடத்தப்படுகிறது. இதில் 2011ஆம் ஆண்டு சிவில் சர்விஸ் ஆப்டிடியூட் டெஸ்ட் - CSAT என்ற 2 தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது ஒவ்வொன்றும் தலா 200 மதிப்பெண்களுக்குரியது.
இதில் CSAT-II வில் சிவில் சர்வீஸ் பணியில் சேருவோரின் ஆங்கிலத் திறன், முடிவெடுத்தல் உள்ளிட்ட தனிநபர் திறன்களை முழுமையாக கண்டறிவதற்கான திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த வினாத்தாளின் பெரும்பாலான வினாக்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன.
இந்த CSAT தேர்வு முறையை அறிமுகப்படுத்தியதால் ஆங்கில மொழி மற்றும் அறிவியல் பாடங்களில் திறமை உள்ளவர்கள் மட்டுமே அதிக எண்ணிக்கையில் சிவில் சர்வீஸில் தேர்வாகினர். இதனால் தமிழ், இந்தி உள்ளிட்ட மாநில மொழிகளை எடுத்துப் படித்தோர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெல்வது கடினமாகிப் போனது.
இதனால் இந்தி பேசும் மாநிலங்களில் CSAT தேர்வு முறைக்கு எதிராக குரல்கள் எழுந்தன. மேலும் CSAT வினாத்தாளை இந்தியிலும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தேர்வுகள் ஒத்திவைப்பு
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வீட்டு முன்பு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுகள் ஆகஸ்ட் 24-ந் தேதி வரை ஒத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தெளிவான உறுதி மொழி வழங்கும் வரை சிவில் சர்வீஸ் தேர்வுகளையே நடத்தக் கூடாது என்பது மாணவர்கள் கோரிக்கை
மீண்டும் போராட்டம்
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி நடைபெறவுள்ள முதல் நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விநியோகம் நேற்று தொடங்கியது. இதனையடுத்து டெல்லியில் புராரி பகுதியில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட அது வன்முறையாக வெடித்தது. போலீசார் தடியடி நடத்தினர்.
நாடாளுமன்றத்தில்
இன்றும் டெல்லியில் மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது. நாடாளுமன்றத்திலும் இன்று இந்த விவகாரம் எதிரொலித்தது.
இப்பிரச்சனையில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்?
இதனிடையே டெல்லியில் இன்றும் போராட்டம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வர்களை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டங்களைத் தடுக்கும் வகையில் டெல்லியில் 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்படும் எனத் தெரிகிறது.