மார்க்கண்டேய கட்ஜுவின் புகார் மீது விவாதம் நடத்தக் கோரி ராஜ்யசபாவில் அதிமுக அமளி!
டெல்லி: முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு புகார் குறித்து விவாதம் நடத்தக்கோரி அதிமுக உறுப்பினர்கள் ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகத் தான் பதவி வகித்திருந்த காலத்தில் நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்து முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தமது இணைய பக்கத்தில் எழுதி வருகிறார். அதில், ஊழல் நீதிபதி ஒருவருக்காக பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கை திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் மிரட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ராஜ்யசபா இன்று காலை கூடியவுடன் அதிமுக எம்.பி. மைத்ரேயன், முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்த புகார் வெளியான செய்தித்தாளை உயர்த்திக்காட்டியபடி நீதித்துறை ஊழல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அப்போது குறுக்கிட்ட சபை தலைவர் ஹமீது அன்சாரி, இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றார். ஆனால், கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு நீதித்துறை ஊழல் குறித்து விவாதிக்க வேண்டும் என மீண்டும் அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இதனால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.