எழுத்தாளர் அனந்தமூர்த்தி கவலைக்கிடம்: மோடி பிரதமரானால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்றவர்
பெங்களூர்: ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி (81) கிட்னி பாதிப்பால், கவலைக்கிடமான நிலையில் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கன்னடத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி. உயரிய விருதான ஞானபீடத்தை பெற்றவர். ஆதிக்க ஜாதியில் பிறந்தாலும், அந்த ஜாதியால் கொண்டுவரப்பட்ட வர்ண ஏற்றத்தாழ்வுகளை சாடி வருபவர். சம்பிரதாயங்களில் ஊறிக்கிடக்கும் கர்நாடகாவில், புரட்சியின் விதையை தூவி வருபவர் அனந்த மூர்த்தி.
நரேந்திரமோடி பிரதமரானால் இந்த நாட்டை விட்டே நான் வெளியேறிவிடுவேன் என்று லோக்சபா தேர்தலுக்கு முன்பு, அனந்த மூர்த்தி கூறியிருந்தார். மோடி பிரதமரானதும், அவரது ஆதரவாளர்களால் அனந்த மூர்த்திக்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி கர்நாடக அரசு அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்திருந்தது.
கிட்னி பாதிப்பில் அவதிப்பட்டு வந்த அனந்த மூர்த்தி, 20 நாட்களுக்கு முன்பு பெங்களூர் மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இரு கிட்னிகளும் செயலிழந்துள்ள நிலையில், இரு தினங்களுக்கு முன்பு அனந்தமூர்த்திக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். அனந்த மூர்த்தியின் நிலைமை மோசமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.