ஊழல்வாதிகளுக்கு எதிராக நோட்டா ஓட்டு போடுங்கள்: அன்னா ஹசாரே
ரலேகன் சித்தி: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள், கிரிமினல்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டால் நோட்டா ஓட்டு போடுங்கள் என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரே, தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:
'நாட்டில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் பெரிய மாற்றம் வந்து விடப்போவதில்லை. ஊழலில் ஒரு கட்சி ஆட்சியில் பட்டம் பெற்றால், மற்றொரு கட்சி ஊழலில் மேற்படிப்பு பெற்றுள்ளது. எனவே ஆட்சியாளர்கள் மாறுவதால் மட்டும் அடிப்படை மாற்றம் வந்து விடாது.
மராட்டியத்தில் ஷீரடி தொகுதியில் சிவசேனா வேட்பாளராக போட்டியிடும் பபன் கோலப் மீது ஊழல் பின்னணி உள்ளது. இவர் சிவசேனா-பா.ஜ.க. ஆட்சியின்போது, அமைச்சராக இருந்தார். அப்போது ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பதவி விலகினார். அவர் மீதான ஊழலுக்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.
இதேபோல், உஸ்மனாபாத் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பதம்சிங் பாட்டீல் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. அவர் 1995 ஆம் ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் அரசில் அமைச்சராக பதவி வகித்தவர். இவர், பவன்ராஜே நிம்பால்கர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. அந்த வழக்கில் சிறையிலும் இருந்துள்ளார்.
இவர்களுக்கு தேர்தல் டிக்கெட் வழங்கியது பற்றி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோருக்கு கடிதம் எழுதி விவரம் கேட்க உள்ளேன். மேலும், மேற்கண்ட இரு வேட்பாளர்களுக்கு எதிராகவும் தேர்தல் பிரசாரம் செய்வேன்.
மக்களால் மாற்றம்
மக்களால் மட்டும் தீவிரமான மாற்றத்தை கொண்டு வர முடியும். அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களாக ஊழல்வாதிகள், குண்டர்கள், கொள்ளையர்களை நிறுத்தலாம். அப்போது, வாக்காளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
மயங்கிவிடாதீர்கள்
கட்சிகள் செய்யும் தவறை வாக்காளர்களும் செய்து விடக்கூடாது. பணம், பரிசு பொருட்கள், ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி கிரிமினல் மற்றும் ஊழல்வாதிகளை தேர்ந்தெடுத்து விடக்கூடாது.
நோட்டா ஓட்டு
உங்கள் தொகுதியில் நேர்மையான, ஒழுக்கமான வேட்பாளரை தேர்ந்தெடுங்கள். சரியான வேட்பாளர் கிடைக்காவிட்டால், மின்னணு எந்திரத்தில் உள்ள 'நோட்டா' பொத்தானை பயன்படுத்தி உங்களது எதிர்ப்பை தெரிவியுங்கள்.
ஊழல்வாதிகளுக்கு டிக்கெட்
தேர்தலுக்கு முன்பு சில கட்சிகள் ஊழலுக்கு எதிராக பேசி வந்தன. ஆனால் தேர்தலில் ஊழல்வாதிகளுக்கு டிக்கெட் கொடுத்துள்ளன. கட்சி தலைவர்கள் என்ன சொன்னார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை தற்போது காண முடிகிறது" என்று அவர் கூறினார்.