மோடி, ராகுலை எதிர்த்து 'சந்தனக் கடத்தல்' வீரப்பன் மருமகன் போட்டி
வாரணாசி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை எதிர்த்து சந்தனக் கடத்தல் வீரப்பனின் மருமகன் ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரி மகன் ராமச்சந்திரன். 34வயதாகும் ராமச்சந்திரன், தருமபுரி மாவட்டம் நாகமராய் புத்தேரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் நேற்று முன்தினம் மோடி போட்டியிடும் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராமச்சந்திரன், யாரையும் எதிர்த்து போட்டியிடுவது என்பது என் நோக்கமல்ல. பிரபலங்களை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்பதுதான் என் விருப்பம் என்றார். அதே நேரத்தில் மோடி பிரதமராக வேண்டும்.. மோடி பிரதமரானால்தான் நாடு முன்னேறும் என்றும் கூறியிருக்கிறார் ராமச்சந்திரன்.
ஆனால் சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றிய எந்த ஒரு கேள்விக்குப் பதிலளிக்க மறுத்த ராமச்சந்திரன், தாம் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியிலும் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த லோக்சபா தேர்தலிலும் ராமச்சந்திரன் போட்டியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.