எங்களுக்கு ஓட்டுப் போடலைனா குடிநீர் கட்... அஜித்பவாரின் மிரட்டல் வீடியோவால் சர்ச்சை
பாராமதி: மகாராஷ்டிராவில் நேற்று ஓட்டுப்பதிவு முடிவடைந்த சில மணிநேரங்களிலேயே ‘எங்களுக்கு ஓட்டளிக்கவில்லையென்றால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சரத் பவாரின் மகனும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் பேசுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் மகன் அஜித் பவார்(65) பதவி வகிக்கிறார்.
இந்நிலையில் லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவில் முக்கிய வேட்பாளராக சரத்பவாரின் மகள் சுப்ரியா சூலே போட்டியிட்டார். இவருக்கு ஆதரவாக அவரது சகோதரும் துணை முதல்வருமான அஜித் பவார் பிரசாரம் செய்து வந்தார்.
நேற்று அங்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஆனால், தேர்தல் நடந்து முடிந்த சில மணி நேரங்களிலேயே சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று வெளியானது. அதில் பிரச்சாரத்தின் போது அஜீத் பவார் வாக்காளர்களை மிரட்டுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
மொபைல் போனில் எடுக்கப்பட்ட அக்காட்சிகளில் அஜித் பவார், ‘யார் யார் எந்த கட்சிக்கு ஓட்டளித்துள்ளார்கள் என்பதை ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பார்த்து நாங்கள் கண்டுபிடித்து விடுவோம்; பல பிரச்னைகளை தாண்டி கடும் முயற்சி செய்து நான் தான் இந்த கிராமத்திற்கு குடிநீரை பெற்று தந்தேன்; அதனால் நீங்கள் எங்கள் கட்சிக்கு ஓட்டளிக்காவிட்டால் இந்த கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்' என இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
மேலும், அந்த வீடியோவில் அஜீத் பவாரின் மிரட்டலைத் தொடர்ந்து கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர், ஏற்கனவே முறையற்ற குடிநீர் விநியோகம் செய்யபட்டு வரும் நிலையில் எதற்காக குடிநீர் விநியோகத்தை நிறுத்துவதாக கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்புவது போலவும், அதனால் அந்த நபரை கூட்டத்தை விட்டு வெளியேற்ற அஜித் பவார் தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிடுவது போலவும் காட்சிகள் உள்ளன.
அஜித்பவாரின் இந்த வீடியோ காட்சிகள் மகாராஷ்டிர அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், இந்தக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டவையென்றும், இது போன்ற வார்த்தைகளை அஜித் பவார் பேசவில்லை எனவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் சிவ சேனா, ஆம் ஆத்மி கட்சி இந்த வீடியோ தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே கடந்தாண்டு இதே ஏப்ரல் மாதம் அணைகளில் தண்ணீர் திறந்து விடுவது குறித்த உரையில் சிறுநீர் பற்றி பேசி அஜித் பவார் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.