"டைவர்ஸுக்கு" நாங்க ரெடி.. காங்கிரஸுக்கு குடைச்சல் தரும் தேசியவாத காங்.!
மும்பை: பாஜகவுக்கு சிவசேனா சிக்கலைத் தந்து வருகிறது என்றால் மறுபக்கம், காங்கிரஸுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளது தேசியவாத காங்கிரஸ்.
காங்கிரஸுடன் எங்களது கூட்டணி தொடருகிறது என்றாலும் கூட விவாகரத்தை சந்திக்கவும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளதால் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணியும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
1999ம் ஆண்டு முதல் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணிதான் மகாராஷ்டிராவை ஆட்சி புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைக்குள் பதில்
தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஒரு பார்முலாவை காங்கிரஸுக்குக் கொடுத்துள்ள தேசியவாத காங்கிரஸ், இன்றைக்குள் தனது முடிவை காங்கிரஸ் சொல்ல வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது.
கஷ்டமான நிலை
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல் கூறுகையில், நிலைமை சிக்கலாகவே உள்ளது. அவர்கள் முடிவெடுக்க வேண்டும். இன்றைக்குள் எடுத்தால் நல்லது என்றார் அவர்.
கூட்டணி தொடர விருப்பம்
உண்மையில் காங்கிரஸுடன் கூட்டணி தொடரவே தேசியவாத காங்கிரஸ் விரும்புகிறதாம். ஆனால் காங்கிரஸ் பிடிவாதம் பிடித்தால் தனித்துப் போட்டியிடவும் அது தயாராகி விட்டதாம்.
சீட்டைக் கூட்டும் தேசியவாத காங்கிரஸ்
கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 174 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் 114 சீட்களிலும் போட்டியி்ட்டன. ஆனால் இந்த முறை 144 தொகுதிகளில் போட்டியிட தேசியவாத காங்கிரஸ் விரும்புகிறதாம்.
லோக்சபா தோல்வி எதிரொலி
தேசியவா காங்கிரஸின் இந்த கிராக்கிக்கு லோக்சபா தேர்தல் முடிவுதான் காரணம். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களில் வென்றது என்பது நினைவிருக்கலாம்.
174ல் ஒரு தொகுதியைக் கூட குறைக்க காங். மறுப்பு
ஆனால் கடந்த முறை போட்டியிட்ட அதே 174 தொகுதிகளில் போட்டியிடுவோம். ஒரு தொகுதியைக் கூட குறைக்க மாட்டோம் என்று காங்கிரஸ் கூறி விட்டது. இதனால் சிக்கல் நீடிக்கிறது.
124 தருகிறோம்
அதேசமயம், தேவைப்பட்டால் 124 தொகுதிகள் வரை தேசியவாத காங்கிரஸுக்குத் தர முன்வருவோம் என்றும் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறதாம். இதை தேசியவா காங்கிரஸ் ஏற்கவில்லை.