பாஜகவுக்கு 135 தொகுதிகளை ஒதுக்க முடியாது: உத்தவ் தாக்கரே திட்டவட்டம்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு 135 தொகுதிகளை ஒதுக்கவே முடியாது என்று சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் 15-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக- சிவசேனா தலா 135 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது பாஜகவின் கருத்து.
சிவசேனா ஏற்க மறுப்பு
இதனை சிவசேனா ஏற்க மறுப்பதால் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை பாஜக நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:
சாத்தியமே இல்லை
பாரதிய ஜனதாவும் சிவசேனாவும் தலா 135 தொகுதிகளில் போட்டியிடுவது என்பது சாத்தியமற்றது. இதை நான் வெளிப்படையாகவே தெரிவித்தும் இருக்கிறேன்.
கூட்டணி தொடர வேண்டும்
பாரதிய ஜனதா மேலிடத்துக்கும் எங்கள் நிலையைத் தெரிவித்துவிட்டோம். நாங்கள் பாஜகவுடன் 25 ஆண்டுகள் கூட்டணி வைத்திருக்கிறோம். இக்கூட்டணி தொடர வேண்டும் என்றே விரும்புகிறேன்.
இந்துத்துவா கொள்கைக்காக கூட்டணி
பாஜக- சிவசேனா கூட்டணியே மகாராஷ்டிரா மாநில தேர்தலில் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். இந்துத்துவா கொள்கைக்காகவே பாஜகவுடன் தொடர்ந்தும் கூட்டணி வைத்துள்ளோம்.
எங்கள் நிலை..
இந்த நீண்டகால கூட்டணியை முறிக்கும் வகையில் யாரும் எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டாம். இதுதான் எங்கள் நிலைப்பாடு.
இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.