தமிழகத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: ராஜ்நாத் சிங்
டெல்லி: தமிழகத்தில் நடப்பவற்றை உன்னிப்பாக கவனித்து வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஜெயலலிதா வழக்கு குறித்து கர்நாடக டிஜிபியிடம் விவரம் கேட்டுத் தெரிந்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட உடனேயே தமிழகத்தில் பதட்டமான சூழல் நிலவியது. அதன் பிறகு அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் பேருந்துகள் மீது கல்வீசி தாக்கினர். மேலும் கடைகளை மூடுமாறு அவர்கள் மக்களை மிரட்டினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் கடைகள் மூடப்பட்டதால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இந்நிலையில் இது குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,
தமிழகத்தில் நடப்பவற்றை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மேலும் தமிழக டிஜிபி மற்றும் மத்திய உள்துறை செயலாளருடன் தொடர்பில் உள்ளோம் என்றார்.
ராஜ்நாத் சிங் கர்நாடக டிஜிபியிடம் ஜெயலலிதாவின் வழக்கு விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.