நில ஒதுக்கீட்டுக்கு சலுகையா? மோடிக்கு விமானம் கொடுப்பது ஏன்?: தொழிலதிபர் அதானி விளக்கம்
மும்பை: லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் மோடியை விமர்சித்து வரும் ராகுல் காந்தி தொழிலதிபர் அதானியையும் விடாமல் விமர்சித்தே வருகிறார். இந்த அதானிக்குத்தான் ஒரு மீட்டர் நிலத்தை மிட்டாய் விலைக்கு விற்றதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் தம் மீதான குற்றச்சாட்டுகளை அதானி மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அதானி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
1993ஆம் ஆண்டு முதல் குஜராத்தின் முந்த்ரா சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தி வருகிறோம். அப்போது முதல் பல அரசியல் கட்சிகள் குஜராத்தை ஆட்சி செய்துவிட்டன.
எங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் அனைத்தும் விவசாயத்துக்கு ஏதுமற்ற நிலம்தான். உரிய நியாயமான விலையில்தான் நாங்கள் அவற்றை வாங்கி இன்று சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தியிருக்கிறோம். ஏறத்தாழ ரூ50 ஆயிரம் கோடியை இங்கே முதலீடு செய்து இருக்கிறோம்.
குஜராத்தை தவிர ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஒடிஷா, சத்தீஸ்கர், தமிழகம், ஆந்திரா, ஹரியானா என பல மாநிலங்களில் எங்கள் தொழிற்சாலைகளை நிறுவியிருக்கிறோம்..
மோடியின் விமான செலவு...
எங்கள் நிறுவனத்தின் விமான பிரிவை கவனித்துக் கொள்ள தனி பிரிவு உண்டு. எங்களது விமானங்களை பாரதிய ஜனதா மட்டுமல்ல.. பல்வேறு அரசியல் கட்சிகளும் விமானங்களை வாடகைக்கு பயன்படுத்துகின்றன. அவற்றுக்கான கட்டணத்தையும் அந்தந்த அரசியல் கட்சிகள் செலுத்தி வருகின்றன.
இவ்வாறு அதானி கூறியுள்ளார்.