மக்களவையில் ஏன் எதிர்க்கட்சி தலைவர் இல்லை? மத்திய அரசிடம் விளக்கம் கேட்கிறது உச்சநீதிமன்றம்
டெல்லி: எதிர்க்கட்சி தலைவர் நியமனத்தில் விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எதிர்க்கட்சி பதவிக்கு தேவையான 55 எம்.பி.க்கள் எண்ணிக்கையை பெறவில்லை. அதே நேரம் தனிப்பட்ட பெரிய கட்சியாக 44 எம்.பிக்களை வைத்துள்ளது.
இதுகுறித்து சட்ட ஆலோசனை நடத்திய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி பதவி வழங்க முடியாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில், லோக்பால் குழுவுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்ய அரசு காலதாமதம் காட்டிவருவதாக குற்றம்சாட்டி வக்கீல் பிரசாந்த் பூசன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தலைமை நீதிபதி லோதா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
"லோக்பால் குழுவின் முக்கிய உறுப்பினர் எதிர்க்கட்சி தலைவர். லோக்பால் நியமனத்திற்கான குழுவில் எதிர்கட்சி தலைவர் இடம் பெற வேண்டும் .
சில முக்கிய நியமனத்திற்கும் எதிர்கட்சி தலைவர் பங்களிப்பு கட்டாயமாக உள்ளது. எனவே எதிர்கட்சி தலைவர் என்ற வார்த்தைக்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்" என்று நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளதுடன், அந்த நோட்டிசுக்கான விளக்கத்தை நான்கு வாரத்திற்குள் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கை மத்திய அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.