ஏன் உ.பியில் வந்து குவிகிறீர்கள்?... பீகார், மேற்கு வங்க விதவைப் பெண்களுக்கு ஹேமமாலினி கேள்வி!
மதுரா: உ.பி. மாநிலத்தின் பிரபலமான அபலைப் பெண்கள் மற்றும் விதவைகளுக்கான புகலிடமாக விளங்கும் விருந்தாவன் கிராமத்தில், பீகார், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விதவைப் பெண்கள் வரக் கூடாது என்று பாஜக எம்.பியான ஹேமமாலினி கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஆயிரக்கணக்கான விதவைப் பெண்கள் - அவர்களில் பெரும்பாலானவர்கள் வயதான மூதாட்டிகள், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் ஆவர் - விருந்தாவன் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
மோடிக்கு ஆதரவாக இவர்கள் பிரார்த்தனை உள்ளிட்டவற்றையும் நடத்தியுள்ளனர். மேலும் ராக்கி தினத்தின்போது இவர்கள் ராக்கி கயிறுகளையும் மோடிக்கு அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் விருந்தாவன் கிராமத்தில், உ.பியைச் சேராதவர்கள் தங்குவது குறித்து பாஜகவைச் சேர்ந்த ஹேமமாலானி விமர்சித்துப் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
65 வயது மூதாட்டி ஹேமமாலினியின் பேச்சு!
65 வயதான மூதாட்டியான ஹேமமாலினி இதுகுறித்து மதுராவுக்கு வந்திருந்தபோது கூறுகையில், விருந்தாவன் விதவைகளுக்கு வங்கிகளில் கணக்கு உள்ளது. நல்ல வருமானம் கிடைக்கிறது. படுப்பதற்கு அருமையான படுக்கைகளும் கூட உள்ளன. ஆனாலும் அவர்கள் பிச்சை எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அதை விட மாட்டேன் என்கிறார்கள்.
40,000 விதவைகள்
விருந்தாவன் கிராமத்தில் 40,000 விதவைகள் தங்கியுள்ளனர். இனியும் இங்கு ஆட்களை தங்க வைக்க முடியாத அளவுக்கு இட நெருக்கடி ஏர்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்திலிருந்து ஏன் வருகிறார்கள்
மேற்கு வங்கத்திலிருந்துதான் பலரும் வருகிறார்கள். அது சரியல்ல. ஏன் அவர்கள் அங்கேயே தங்கக் கூடாது. அங்கேயே நல்ல நல்ல கோவில்கள் உள்ளது. அதேபோலத்தான் பீகாரிகளுக்கும்.
மமதாவுடன் பேசுவேன்
மேற்கு வங்க மாநில விதவைகள் இங்கு வந்து குவிவதால் ஏற்படும் இடப் பிரச்சினை தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியுடன் நான் பேசவுள்ளேன் என்றார் ஹேமமாலினி பாட்டி!.
மிஸ்ஸிங் ஹேமமாலினி
மதுரா தொகுதியிலிருந்து லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹேமா. இந்தத் தொகுதிக்குட்பட்ட கிராமம்தான் விருந்தாவன். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் ரொம்ப காலமாக இந்தப் பக்கமே வராமல் இருந்ததால் காணவில்லை என்று ஹேமாவின் படத்தைப் போட்டு போஸ்டர் ஒட்டும் அளவுக்கு நிலைமை போனது என்பது நினைவிருக்கலாம்.
லோக்சபாவிலும் இர்ரெகுலர்!
தொகுதிக்குத்தான் வருவதில்லை என்றால் நாடாளுமன்றக் கூட்டங்களுக்கும் கூட ஹேமா சரிவர போவதில்லை. இதனால் அங்கும் அவருக்குக் கெட்ட பெயர்தான். இந்த நிலையில் விதவை, அபலைப் பெண்கள் குறித்து அவர் கூறியுளள்ள கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.