என்னைத் தடை செய்ய பாரிக்கர் யார்... "பிங்க் ஜட்டி" புகழ் பிரமோத் முத்தலிக் கொந்தளிப்பு!
பெல்காம்: கோவா மாநிலத்திற்குள் நான் நுழைய தடை விதிப்பதாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. கிறிஸ்தவர்களுடன் கை கோர்த்துக் கொண்டு செயல்படுகிறார் பாரிக்கர். அவரது ஆட்சியைக் கவிழ்க்க நேரிடும் என்று அவரை எச்சரிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் சர்ச்சைகரமான ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக்.
என்னைத் தடை செய்யும் முடிவு சட்டவிரோதமானது, இதை ஏற்க முடியாது என்றும் முத்தலிக் கூறியுள்ளார்.
கிறிஸ்தவர்களுடன் கை கோர்த்துக் கொண்டு பாரதிய ஜனதாக் கட்சியை பாரதிய ஜீசஸ் கட்சியாக மாற்றி விட்டார் பாரிக்கர் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பெண்களைத் தாக்கும் முத்தலிக் அமைப்பு
முத்தலிக்கின் அமைப்பினர் பார்கள், டான்ஸ் கிளப் போன்றவற்றில் தாக்குதல் நடத்திப் பிரபலமானவர்கள். மேலும் பெண்களைத் தாக்கி அடித்து உதைத்தும் பரபரப்பை ஏற்படுத்தியவர்கள்.
கோவாவில் கிளை
இந்த நிலையில் முத்தலிக் கோவா வரவுள்ளார். அங்கு செப்டம்பர் மாதம் தனது அமைப்பின் கிளையைத் தொடங்கவுள்ளார்.
கடும் எதிர்ப்பு
ஆனால் அதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. முத்தலிக் கோவா வந்தால் இங்குள்ள பார்கள், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகளில் பெண்கள் மீது முத்தலிக்கின் அமைப்பினர் தாக்குதல் நடத்தலாம், வன்முறை வெடிக்கலாம். எனவே முத்தலிக்கை அனுமதிக்கக் கூடாது என்று குரல்கள் எழுந்தன. இதையடுத்து கோவா அரசு முத்தலிக் கோவா வருவதற்குத் தடை விதித்து விட்டது.
ஏன் வரக் கூடாது
இந்தத் தடையால் கடும் கொதிப்படைந்துள்ளார் முத்தலிக். இதுகுறித்து அவர் கூறுகையில் இது சட்டவிரோதமானது. பாரிக்கர் அரசைக் கவிழ்க்க நேரிடும்.
பாரதிய ஜீசஸ் பார்ட்டி
பாரதிய ஜனதாக் கட்சியை கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து பாரதிய ஜீசஸ் பார்ட்டியாக மாற்றி விட்டார் பாரிக்கர். இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ்.அமைப்புக்கு நான் கடிதம் எழுதுவேன்.
சாத்தான்களுக்கு அனுமதி.. எனக்குத் தடையா
கோவா மாநிலத்தில் எத்தனையோ சாத்தான்கள் உள்ளன. அதையெல்லாம் தடை செய்யாமல் என்னைத் தடை செய்தது ஏன் என்பதை பாரிக்கர் விளக்க வேண்டும்.
செக்ஸ், போதை, பப்புகள் முக்கியமா
எந்தவிதமான கெட்ட பழக்கமும் இல்லாத சுத்தமான மனிதன் நான். ஆனால் கோவாவில் பார்களுக்குப் பஞ்சமில்லை, செக்ஸுக்குப் பஞ்சமில்லை, போதைப் பொருட்களுக்கும், கடத்தல் கும்பல்களுக்கும் பஞ்சமில்லை. இப்படிப்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வர், சுத்தமான தேசப்பற்றுள்ள என்னைத் தடை செய்கிறார் என்றார் முத்தலிக்.
பிங்க் ஜட்டி போராட்டம்
மங்களூர் பப்பில் புகுந்து பெண்களைத் தாக்கியது, காதலர் தினத்தின்போது காதலர்கள் மீது தாக்குதல் நடத்தியது ஆகிய சர்ச்சைகளில் பிரமோத்தின் அமைப்பு பலமுறை சம்பந்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து பெண்கள் அமைப்பு ஒன்று பிங்க் ஜட்டியை அவருக்கு அனுப்பும் போராட்டத்தை நடத்தியது என்பது நினைவிருக்கலாம்.