புகுந்த வீட்டில் டாய்லெட் வசதி இல்லை: கணவரை விவாகரத்து செய்த பெண்
ராஞ்சி: கழிவறை வசதி செய்து தராத கணவனை விவாகரத்து செய்துள்ளார் ஒரு பெண், சட்டீஸ்கர் மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சத்தீஷ்கார் மாநிலம் ஜான்கீர்-சம்பா மாவட்டத்தில் உள்ள கோட்மி என்ற கிராமத்தை சேர்ந்த பார்வதி சிங் (வயது 23) என்ற பெண்ணுக்கும் துலர் சிங் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது துலர் சிங்கின் பெற்றோரிடம், அவர்களுடைய வீட்டில் தனக்கு கழிவறை வசதி செய்து தருமாறு பார்வதி ஒரு நிபந்தனை விதித்தார்.
ஆனால் திருமணம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் அவர்கள் கழிவறை வசதியை செய்து தரவில்லை. இதன் காரணமாக பார்வதிக்கும் அவரது மாமனார் மாமியாருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து பார்வதி, கிராம பஞ்சாயத்தாரிடம் முறையிட்டார். மேலும் கழிவறை வசதி செய்து தராத தன் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுத் தரும்படி கோரினார். இதனை விசாரித்த பஞ்சாயத்தார் பார்வதிக்கு சாதகமாக தீர்ப்பு கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜான்கீர்-சம்பா மாவட்ட பாஜக எம்.பி. கமலா படேல், பார்வதியின் துணிச்சலான செயலை வெகுவாக பாராட்டினார்.
மேலும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் கழிவறை வசதியை ஏற்படுத்த தேவையான நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் கூறினார்.