மும்பையில் 16வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
மும்பை: மும்பையில் 35 வயது பெண் ஒருவர் 16வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அந்தேரியில் இருக்கிறது லோகந்த்வாலா காம்பிளக்ஸ் பகுதி. அந்த பகுதியில் இருக்கும் கிரீன் ஏக்கர்ஸ் அபார்ட்மென்ட்டில் 16வது மாடியில் வசித்து வந்தவர் ஏக்தா பாபர்(35). அவரது தந்தை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து ஏக்தா தனது தாயுடன் அந்த அபார்ட்மென்ட்டில் வசித்து வந்தார். மன அழுத்தத்தில் இருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு தனது வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அந்த சமயம் ஏக்தாவின் தாய் படுக்கையறையில் இருந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு நடிகர், நடிகைகளை அனுப்பி வைக்கும் வேலை பார்த்து வந்தார் ஏக்தா. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வேலை இன்றி இருந்த ஏக்தா மிகவும் கவலையுடன் காணப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்யும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை.