உ.பியில் என்னை பிரசாரம் செய்ய விடவேயில்லை: தோல்விக்கு காரணம் சொல்லும் யோகி ஆதித்யாநாத்
லக்னௌ: உத்தரபிரதேச மாநிலத்தில் இடைத்தேர்தல் பிரசாரம் நடைபெற்ற போது, என் மீது பொய் புகார்களை அளித்து ஆளும் கட்சி, என்னை பிரச்சாரத்தில் ஈடுபட விடாமல் தடுத்து விட்டதாக, பாரதிய ஜனதா கட்சி எம்.பி. யோகி ஆதித்யாநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள கோராக்பூர் தொகுதியின் பாஜக எம்.பி. ஆக இருப்பவர் யோகி ஆதித்யாநாத். தற்போது உத்தர பிரதேசத்தில் 11 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒரு எம்.பி. தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலுக்கான பாஜக பிரசாரக்குழு தலைவராக யோகி நியமிக்கப்பட்டிருந்தார். இன்று வாக்குகள் எண்ணப்பட்டதில் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி 8 தொகுதிகள் மற்றும் ஒரு எம்.பி. தொகுதியை கைப்பற்றியுள்ளது.
இந்த தோல்வி குறித்து யோகி ஆதித்யாநாத் கூறுகையில், "கட்சியின் மோசமான செயல்பாடு, வேட்பாளர்கள் தேர்வு மற்றும் பாஜக கட்சியின் இடைத்தேர்தலுக்கான தேர்தல் யுக்தி ஆகியவை இந்த தோல்விக்கு காரணம்.
மேலும், உத்தர பிரதேச மாநிலத்தில் எந்த ஒரு இடத்திலும் என்னை பிரசாரம் செய்ய அனுமதிக்கவில்லை'' என்றார்.
உத்தரபிரதேசதில் பிரசாரம் செய்தபோது வகுப்புவாத வெறுப்பை பரப்பும் வகையில் பேசியதாக யோகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.