கோவாவில் பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியை உள்பட 3 பேரை தாக்கிய வாலிபர்
பனாஜி: கோவாவில் பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை ஆகியோரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவா மாநிலம் பனாஜியில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது தபோலிம் கிராமம். அந்த கிராமத்தில் உள்ள கேசவ் சாதனா ஸ்மிருதி உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருப்பவர் சுஷ்மா கர்கோன்கர். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பரிக்ஷித் ரைகர்(29) என்பவருக்கும் இடையே முன்பு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரைகர் இன்று பகல் 12 மணிக்கு பள்ளிக்குள் புகுந்து சுஷ்மாவை தாக்கினார். அதை பார்த்து சுஷ்மாவை காப்பாற்ற வந்த ஆசிரியை மற்றும் பியூனையும் தாக்கினார். இதையடுத்து பள்ளி ஊழியர்கள் ரைகரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த சுஷ்மா கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவத்தில் மாணவர்கள் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படவில்லை.