தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: நடுரோட்டில் சமையல் செய்து நடிகை ரோஜா போராட்டம்
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மசோதாவுக்கு மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. அவர் அதனை ஆந்திர சட்ட சபை ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளர்.
இந்த மசோதாவுக்கு ஆந்திர சட்டசபை ஒப்புதல் வழங்க 6 வாரம் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் வியாழக்கிழமை தொடங்கியது.
இந்த நிலையில் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உள்பட சீமாந்திரா பகுதி எம்.பி.க்கள் வியாழன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களிலும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆந்திரா, தமிழகம், கர்நாடகம் எல்லையில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையாக நின்றன.
திருப்பதி-சென்னை நெடுஞ்சாலையில் புத்தூர் அருகே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நடிகை ரோஜா தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. மேலும் அவர் நடுரோட்டில் சமையல் செய்து போராட்டத்திலும் ஈடுபட்டார். இதனால் சென்னை- திருப்பதி இடையே பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.