விமானத்திலேயே வித் அவுட்டில் பயணித்த 16 வயது சிறுவன்
வாஷிங்டன்: அமெரிக்காவில் விமானத்தின் சக்கரங்கள் உள்ள பெட்டியில் உட்கார்ந்து கொண்டு 5 மணி நேரம் வித்தவுட்டில் பயணித்த 16 வயது சிறுவன் குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டான்.
அமெரிக்காவில் தற்போது கடுமையான குளிர் வாட்டி வருகிறது. உறையும் குளிருக்கு நடுவில் கலிபோர்னியாவில் இருந்து ஹவாய் நகரம் வரையில் விமானத்தின் சக்கரம் உள்ள பெட்டியில் அமர்ந்து 16 வயது சிறுவன் பயணித்துள்ளான். குளிர், அதிகப்படியான காற்றழுத்தம் போன்றவற்றால் சுவாசிக்க ஆக்சிஜன் போதிய அளவு கிடைக்காமல் அச்சிறுவன் மயக்கமடைந்துள்ளான்.
ஆனால் விமானம் தரையிறங்கியபோது அதிருஷ்டவசமாக சிறுவனுக்கு நினைவு திரும்பியது.
ஹவாய் விமான நிலையத்தில் அச்சிறுவனை பார்த்த விமான நிலைய அதிகாரிகள், மத்திய புலனாய்வு துறையான எப்.பி.ஐக்கு தகவல் அளித்தனர். எப்.பி.ஐ அதிகாரிகள் சிறுவனிடம் சோதனை நடத்தியபோது அவனிடம் எந்த ஒரு ஆவணமும் இல்லை என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அச்சிறுவனிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவன் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் குழந்தைகள் நல அமைப்பு ஒன்றிடம் ஒப்படைத்தனர். இவ்வளவு தூரம், உறை குளிருக்கு நடுவே விமானத்தின் அடியில் இருந்தபடி உயிரோடு வந்திருப்பதே அதிசயம்தான் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.