சிங்கப்பூர் கலவரம்: மேலும் ஒரு இந்தியருக்கு சிறை.. இவரையும் சேர்த்து 19 பேருக்கு இதுவரை தண்டனை
சிங்கப்பூர்: சிங்கப்பூர் லிட்டில் இந்தியா கலவர வழக்கில் 19ஆவது இந்தியருக்கு 18 மாதங்கள் சிறைதண்டனை விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.
சிங்கப்பூரில் பெரும்பான்மையான இந்தியர்கள் வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதியன்று 400க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த இடத்தில் உள்ளூர் பேருந்து ஒன்று தொழிலாளர் ஒருவர் மீது மோதியதில் அவர் உயிரிழக்க நேரிட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு நடந்த கலவரத்தில் காவல் மற்றும் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த 58 அதிகாரிகள் காயமடைந்தனர். 23 எமர்ஜென்சி வாகனங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.
கடந்த 40 வருடங்களில் சிங்கப்பூரில் நடைபெற்ற மோசமான கலவரம் இதுவென்று அரசு குறிப்பிட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் வழக்குகளில் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சிறைத்தண்டனை தீர்ப்பினை அந்நாட்டு நீதிமன்றம் அளித்துவருகின்றது.
இந்த வரிசையில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது 25 வயது நிரம்பிய ரவி அருண் வெங்கடேஷ் என்ற இந்தியர் ஒருவருக்கு 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறைத்தண்டனை பெறும் 19 ஆவது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.