சவுதியில் ஹஜ் பயணிகளுக்காக 450 லிட்டர் ரத்ததானம் வழங்கிய தவ்ஹீத் ஜமாஅத்
சவுதி: உலகெங்கும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் செய்வதற்காக சவுதி அரேபியாவிற்கு வருகின்றனர். அவர்களில் உடல்நலக் குறைவானவர்கள், விபத்துகளால் பாதிக்கப்பட்டோருக்கு ரத்தம் வழங்கி உயிரை பாதுகாப்பதற்காக சவுதி அரேபியாவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வருடந்தோறும் ஹஜ் மாதத்திற்கு முன்னதாகவே நாடு முழுவதும் பல இடங்களில் ரத்ததான முகாம்களை நடத்தி வருகின்றது.
இந்த வருட ஹஜ் பயணிகளில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக 19-09-14 அன்று ரியாத் டி.என்.டிஜேயால் மாபெரும் ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரியாத் மாநகரிலுள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமில் சுமார் 375 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 327 பேரிடமிருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டது. இந்த முகாமில் மத, மொழி பேதமின்றி ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
அது போன்று தம்மாம் டி.என்.டி.ஜே. தம்மாம் வட்டாரத்தில் 4 இடங்களில் ரத்ததான முகாம்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது. தம்மாம் நகரிலுள்ள சென்ட்ரல் டவர் மருத்துவமனை, அல்கோபர் நகரிலுள்ள கிங் ஃபஹத் மருத்துவமனை, ஜுபைல் நகரிலுள்ள ஜுபைல் ஜெனரல் மருத்துவமனை, கதீஃப் நகரிலுள்ள கதீஃப் ஜெனரல் மருத்துவமனை என நான்கு பெரிய மருத்துவமனைகளில் நடைபெற்ற முகாம்களில் கலந்து கொண்ட 600க்கும் மேற்பட்டோரிடமிருந்து 439 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.
ஏற்கனவே கடந்த செப். 5ம் தேதி ஜித்தா மண்டலம் சார்பாக கிங் ஃபஹத் மருத்துவமனையில் நடந்த ரத்ததான முகாமில் 200 பேர் கலந்து கொண்டதில் 160 பேரிடமிருந்து ரத்ததானம் பெறப்பட்டது. ஆக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் மூலமாக 160 பேரும், ரியாத் மண்டலத்தில் நடந்த ரத்ததான முகாமில் 327 பேரும், தம்மாம் மண்டலத்தில் 4 இடங்களில் நடந்த முகாம்களில் 439 பேரும் என மொத்தம் 926 பேர் ரத்ததானம் செய்துள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 450 லிட்டர் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது.
இது போன்ற முகாம்கள் ஹஜ் பயணிகளுக்காக மட்டுமின்றி ரமலான் மாதத்தில் உம்ரா செய்வதற்காக மக்காவுக்கு வரும் உம்ரா பயணிகளில் தேவையுடையோருக்கு உதவுவதற்காகவும் நடத்தப்படுகின்றது என குறிப்பிட்ட ரியாத் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சோழபுரம் ஹாஜா, இந்திய குடியரசு தினம், இந்திய சுதந்திர தினம் போன்ற தினங்களிலும் நாங்கள் சவுதி அரேபியாவில் ரத்ததான முகாம்களை நடத்தி மக்களுக்கு உதவி வருகிறோம் என்றும் அவசர தேவைகளுக்காக எந்நேரமும் ரத்ததானம் செய்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களால் நடத்தப்படும் இந்த மனிதநேயப் பணியால் முகம் தெரியாத உலகின் பல நாட்டவர்களின் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன என குறிப்பிட்ட தம்மாம் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரத்ததான ஒருங்கிணைப்பாளர் சமீம், இங்கு வழங்கப்பட்ட ரத்தமானது ஹஜ் பயணிகளில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதற்காக ஜித்தா, மக்கா, மதீனா போன்ற நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் என்று குறிப்பிட்டார்.
சவுதி அரேபியாவில் அதிகமானோர் ரத்ததானம் செய்ததில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிட்டத்தக்கது.