ரூ. 5க்கு விற்கப்பட்ட சூப்பர்மேன் காமிக்ஸ் புத்தகம்- 76 ஆண்டுகளுக்குப் பின் ரூ. 19 கோடிக்கு ஏலம்
நியூயார்க்: சூப்பர்மேன் காமிக்ஸ் புத்தகமொன்று ரூ. 19 கோடிக்கு ஏலம் போய் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.
டிவி, செல்போன், வீடியோ கேம் போன்றவைகளின் ஆதிக்கம் அதிகமில்லாத காலத்தில் குழந்தைகளின் முக்கிய பொழுதுபோக்கு சாதனமாக விளங்கியவை தான் காமிக்ஸ் புத்தகங்கள். அதிலும் பெரும்பாலான குழந்தைகளின் கனவு நாயகன் சூப்பர்மேன் தான்.
1938ம் ஆண்டு சூப்பர்மேன் காமிக்ஸின் முதல் பதிப்பு வெளியானது. அப்போது ஒரு புத்தகத்தின் விலை ரூ. 5. இந்நிலையில், கிட்டத்தட்ட 76 ஆண்டுகளுக்குப் பிறகு அப்புத்தகத்தின் பிரதி ஒன்று தற்போது ரூ. 19 கோடிக்கு ஏலம் போயுள்ளது.
சூப்பர்மேன்...
1933ம் ஆண்டு ஜெர்ரி சீகல், ஜோ ஹஸ்டர் ஆகிய இரண்டு இளைஞர்கள் சூப்பர்மேன் கதாபாத்திரத்தை உருவாக்கினார்கள். அதனை அவர்கள் அன்றைய விலையில் ரூ. 7800க்கு டி.சி. காமிக்ஸ் நிறுவனத்துக்கு விற்பவை செய்தனர்.
முதல் பதிப்பு பிரதி...
வாஷிங்டனைச் சேர்ந்த டேரன் ஆடம்ஸ் என்பவரிடம் 1938ம் ஆண்டு வெளியான சூப்பர்மேன் காமிக்ஸின் முதல் பதிப்பின் ஒரு பிரதி இருந்தது. அதை அவர் இபே இணையதளத்தில் ஏலம் விட்டார்.
சூடு பிடித்த ஏலம்...
இந்தக் காமிக்ஸின் தொடக்க விலை ரூ. 60 ஆக நிர்ணயிக்கப் பட்டிருந்தது. ஆனால், ஏலம் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஏலம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
ரூ. 19 கோடி...
இறுதியில் நியூயார்க் டீலர்ஸ் மெட்ரோபாலிஸ் காமிக்ஸ் நிறுவனத்தினர் அந்தப் புத்தகத்தை ரூ. 19 கோடியே 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தனர்.
யாருக்கும் தெரியாது...
இது தொடர்பாக அப்புத்தகத்தை வைத்திருந்த டேரன் ஆடம்ஸ் கூறுகையில், ‘என்னிடம் இப்புத்தகம் இருப்பது யாருக்கும் தெரியாது. மேற்கு வெர்ஜினியாவைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து இந்தப் புத்தகத்தை நான் வாங்கினேன்.
ஆச்சர்யம்... ஆனால், உண்மை
இப்போது இவ்வளவு பெரிய தொகைக்கு இப்புத்தகம் ஏலத்தில் எடுக்கப் பட்டிருப்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.