நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வான பெண் உள்ளிட்ட 3 இந்திய வம்சாவளியினர்
வெல்லிங்டன்: நியூசிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் 3 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
நியூசிலாந்து நாடாளுமன்ற தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கன்வால்ஜித் சிங் பக்சி, டாக்டர் பர்ம்ஜித் பார்மர் மற்றும் மகேஷ் பந்த்ரா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். டெல்லியில் பிறந்த பக்சியும், புனேவில் படித்த பார்மரும் ஆளும் தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்றனர். மும்பையில் பிறந்த பிந்த்ரா நியூசிலாந்து ஃபர்ஸ்ட் பார்டியின் சார்பில் போட்டியிட்டார்.
பக்சி மூன்றாவது முறையாக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் கடந்த 2008ம் ஆண்டு தான் முதன்முதலில் தேர்தலில் வெற்றி பெற்றார். நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வான முதல் இந்தியர் மற்றும் முதல் சீக்கியர் பக்சி என்பது குறிப்பிடத்தக்கது.
பார்மர் மற்றும் பிந்த்ரா முதன்முதலாக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். பிந்த்ரா கடந்த 2002ம் ஆண்டு தான் தனது குடும்பத்துடன் நியூசிலாந்தில் குடியேறினார். 1985ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பக்சி கடந்த 2001ம் ஆண்டு நியூசிலாந்தில் குடியேறினார்.
ஆக்லேண்டில் வாழும் பார்மர் கடந்த 1995ம் ஆண்டு நியூசிலாந்தில் குடியேறினார். அவர் புனே பல்கலைக்கழகத்தில் இருந்து பயோகெமிஸ்ட்ரியில் முதுகலை பட்டமும், ஆக்லேண்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.