பெற்றோரின் கவனக்குறைவால் விபரீதம்- 2 வயது தம்பியை சுட்டுக் கொன்ற 3 வயது அக்கா
நியூயார்க்: அமெரிக்காவில் சொந்த அக்காவே, தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் "உத்தவில் கேகி" பகுதியில் ஒரு வீட்டில் 3 வயது சிறுமி ஒருத்தி தனது 2 வயது தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். பக்கத்து அறையில் அவர்களது தாயார் இருந்தார்.
அப்போது அந்த சிறுமி வீட்டில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வந்தாள். அதைப் பார்த்ததும் உடன் இருந்த அவளது தம்பி அதை பறித்தான். இதனால் அவர்களுக்கு இடையே நடந்த போராட்டத்தில் சிறுமியின் கையில் இருந்த துப்பாக்கி வெடித்தது.
துப்பாக்கி குண்டு சிறுவனின் உடலில் பாய்ந்து ரத்தம் கொட்டியது. துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிவந்த தாயார் குண்டடிப்பட்டு மயங்கி கிடந்த சிறுவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை நடந்தது.
இருந்தும் அவன் பரிதாபமாக இறந்தான். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தற்செயலாக நடந்த விபத்து என வழக்கு பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் இந்த மாதத்தில் மட்டும் இது போன்று 4 சம்பவங்கள் நடந்துள்ளன.
இதுகுறித்து விசாரணை செய்த போலீஸ் அதிகாரிகள் குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை குழந்தைகள் விளையாடும் இடத்தில் அவர்களது பெற்றோர் கவனக்குறைவாக வைத்திருந்ததே இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என கூறினர்.